கார் மோதி உயிரிழந்த எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி -முதல்வர் அறிவிப்பு
சென்னை: சென்னையில் கார் மோதி உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னாவின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மேலும், எஸ்.ஐ. பிரசன்னா குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரை சாலையில், டி.ஜி.பி. அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்ற போது கார் மோதியதில் காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா உயிரிழந்தார்.
இந்நிலையில் காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், எஸ்.ஐ. உயிரிழப்பு இரங்கல் தெரிவித்திருப்பதோடு நிதியுதவியும் அறிவித்திருக்கிறார். எஸ்.ஐ. பிரசன்னா விழுப்புரம் மாவட்டம் கோலியனூரை சேர்ந்தவர் என்பதால், முதலமைச்சர் அறிவித்துள்ள நிதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மூலம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இதனிடையே கார் மோதி உயிரிழந்த எஸ்.ஐ. பிரசன்னாவின் உடலுக்கு தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், பிரச்சன்னாவின் குடும்பத்தினரை சந்தித்த அவர், காவல்துறை என்றுமே பக்கபலமாக நிற்கும் என ஆறுதல் கூறி நம்பிக்கையூட்டினார்.
தமிழக காவல்துறையில் தொழில்நுட்ப காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பிரசன்னாவுக்கு மிகவும் இளம் வயது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த சில மாதங்களில் பரிதாபமாக அவர் உயிரிழந்துவிட்டார்.
சென்னையில் உடற்கூராய்வு முடிக்கப்பட்டு எஸ்.ஐ. பிரசன்னாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் நடைபெறும் இறுதிச்சடங்கில் அம்மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று மரியாதை செலுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே எஸ்.ஐ. பிரசன்னா மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திய ராஜ்குமார் என்பவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எதிர்பாராத விதமாக நடந்த விபத்தா அல்லது வேறு ஏதேனும் உள் காரணங்கள் உள்ளதா என பல கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
காவல் உதவி ஆய்வாளர் விபத்தில் மரணமடைந்த செய்தி அறிந்தவுடன் எவ்வித தாமதமின்றி உடனடியாக முதலமைச்சர் நிதியுதவி அறிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications