வந்தாச்சு போனஸ்! சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு ‘ஸ்வீட்’ நியூஸ்.. 2 ஆலை ஊழியர்களுக்கு அடித்த ‘ஜாக்பாட்'!
சென்னை: கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2 ஆலைகளின் ஊழியர்களுக்கு 20% போனஸ், மற்ற ஊழியர்களுக்கு 10% போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில் அரசு ஊழியர்களுக்கும், பல்வேறு பொதுத் துறை சார்ந்த ஊழியர்களுக்கும் தமிழ்நாடு அரசு போனஸ் அறிவித்து வருகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு பருவத்திற்கும் கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்யும் கரும்பு விலைக்கு மேல் கூடுதலாக சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அதனடிப்படையில், 2022-23 அரவைப் பருவத்திற்கு கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 விகிதம் வழங்குவதற்கு ஏதுவாக மொத்தம் ரூ.253.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டார்.
இந்த நிலையில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு 2022-2023 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி - II ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் போனஸ் ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 11.67% என மொத்தம் 20% போனஸ் வழங்கவும், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 6,103 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2022-2023 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ரூ.415.30 இலட்சம் செலவினம் ஏற்படும்.
இதன் மூலம் அனைத்து கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் எதிர்வரும் காலங்களில் சிறப்பாக பணிபுரிந்து கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு உதவும் சூழ்நிலை உருவாகும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆம்பூர், தேசிய மற்றும் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ஆர்.கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கரும்பு பற்றாக்குறையின் காரணமாக ஆலையின் அரவை இயங்காமல் இருந்து வருகிறது. மேற்கண்ட ஆலைகளில் பணிபுரிந்த விருப்பமுள்ள பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பிற கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு அயற்பணியில் பணிபுரிய ஆணையிடப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், மேற்கண்ட சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்த காலத்திற்குரிய சம்பளம் நிலுவை மற்றும் இதர சட்டப்பூர்வ நிலுவைத் தொகையை வழங்குமாறு தொடர்ச்சியாக தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கருணையுடன் பரிசீலனை செய்து மேற்கண்ட மூன்று சர்க்கரை ஆலைகளுக்கு முன்பண வழிவகைக் கடனாக ரூ.21.47 கோடி வழங்கி ஆணையிட்டுள்ளார்.
மேலும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்க அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கும், எம்.ஆர்.கே, சேலம், திருப்பத்தூர், திருத்தணி, வேலூர் மற்றும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் இயந்திர பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு தேவைப்படும் செயல்பாட்டு பண மூலதன தொகைக்கு முன்பண வழிவகைக் கடனாக ரூ.42.14 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications