எம்.எல்.ஏ.விடம் முதல்வர் என்ன பேசியிருப்பார்? போனவரை மீண்டும் அழைத்தது ஏன்? அமைச்சர்கள் குழப்பம்!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் சோழிங்கநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷிடம் முதல்வர் ஸ்பெஷலாக பேசிய நிகழ்வு அங்கிருந்த அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.
எம்.எல்.ஏ.விடம் முதல்வர் என்ன பேசியிருப்பார்? போனவரை மீண்டும் அழைத்தது ஏன்? என காரணத்தை கண்டறிவதில் அங்கிருந்தவர்கள் ஆர்வம் காட்டினர்.

9 நாட்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சுற்றுப்பயணம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
அப்போது எல்லோரிடமும் சிறிய புன்னகையுடன் அவர்கள் கொடுத்த புத்தகங்கள், பொன்னாடைகளை பெற்றுக்கொண்ட முதல்வர் யாரிடமும் எதுவும் பேசவில்லை.
புன்னகையுடன் தலையை அசைத்து அவர்களது வாழ்த்தை பெற்றுக்கொண்டர். இந்நிலையில் சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் முதல்வருக்கு புத்தகம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
போனவரை திரும்பவும் அழைத்த முதலமைச்சர் ஸ்டாலின், ஏதோ ஆர்வமாக கேட்க, அதற்கு தலையை ஆட்டி சிரித்தவாறு பதிலளித்தார் அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ.
மூத்த அமைச்சர்கள் , முக்கிய நிர்வாகிகளிடம் கூட பேசாத முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு எம்.எல்.ஏ.விடம் என்ன பேசியிருப்பார், அதுவும் போனவரை திரும்ப அழைத்து பேசுகிறார் என்றால் அப்படியென்ன முக்கியத்துவம் என அங்கிருந்த முக்கியப் பிரமுகர்கள் தலையை பிய்த்துக்கொள்ளாத குறையாக குழம்பிப் போயினர்.
இதனிடையே சோழிங்கநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷையே ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு கேட்ட போது, சோழிங்கநல்லூர் பகுதியில் நிறைய திட்டப்பணிகள் நடந்து வருவதால் அதை நினைவில் வைத்த முதல்வர், ''வேலையெல்லாம் எப்படிப் போகுது, பார்த்துகங்க, சீக்கிரம் முடிக்கச் சொல்லுங்க'' எனக் கூறியதாக அரவிந்த் ரமேஷ் நம்மிடம் தெரிவித்தார்.

சோழிங்கநல்லூர் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு தான் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications