நான் கிளம்ப வேண்டும்.. அனுமதி தர்றீங்களா? கல்லூரி மாணவிகளிடம் கேட்டு புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மேட்டூர் அணை திறந்துவிட்ட நிலையில் காவிரி நீர் நாகை வரை வந்துள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் நான் விடை பெற்றுக் கொள்ளட்டுமா என மாணவிகளிடம் முதல்வர் ஸ்டாலின் அனுமதி கேட்டார்.
Recommended Video
நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரியில் (SIET)நடைபெற்ற விழாவில், அக்கல்லூரிக்கு தேசிய தர நிர்ணயக் குழுவால் வழங்கப்பட்ட NAAC-A++ சான்றிதழை அக்கல்லூரியின் தலைவர் மூஸா ரஸாவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி, சிறந்த பேராசிரியர்கள், சிறந்த மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
அந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரிக்கு நான் வந்திருப்பதில் மகிழ்கிறேன். இந்த வாய்ப்பை எனக்கு அமைத்துக் கொடுத்த இந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு எனது நன்றிகள்.

முதல்வர்
நான் முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில் மூன்று கல்லூரிகளில் நடைபெறக் கூடிய விழாக்களில் பங்கேற்றேன். அந்த மூன்று கல்லூரிகள் பெண்கள் படிக்கக் கூடிய கல்லூரிகள்தான். அதுவும் ஒரு வாரத்திற்குள் ராணி மேரிஸ், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, தற்போது இந்த எஸ்ஐஇடி கல்லூரி என 3 பெண்கள் கல்லூரிகளில் நடந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன்.

பிரபல கல்லூரி
அடிமட்ட மக்களிடம் இந்த கல்லூரி பிரபல கல்லூரியாக விளங்கி கொண்டிருக்கிறது. இங்கு நான் வருவது புதிதல்ல. ஒவ்வொரு முறையும் ஜனநாயக கடமையை ஆற்ற இங்குதான் வருவேன். இந்த கல்லூரிக்கு முன்புறம் இருக்கும் அடுத்த தெருவில்தான் எனக்கு வீடு உள்ளது. இந்த கல்லூரியில்தான் எனக்கு வாக்குச் சாவடி இருக்கிறது.

வெற்றிக்கான வாக்கு
இன்று நான் முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறேன் என்றால் அந்த வெற்றிக்கான வாக்கை இந்த கல்லூரியில்தான் செலுத்தினேன். சென்னையில் ஆண்களுக்கு மட்டும் நிறைய கல்லூரிகள் இருந்த நிலையில் பெண்களுக்கு என்று தனியாக ஒரு கல்லூரி வேண்டும் என்ற மன உறுதியுடன் ஆரம்பித்தவர் நீதிபதி பஷீர் அகமது.

அடிக்கல் நாட்டிய நேரு
1955 ஆம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த போது இந்த கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியிருந்தார். இந்த கல்லூரியில் இருந்து ஒரு லட்சம் மாணவிகள் படித்து பட்டம் பெற்று வெளியேறி உள்ளனர். உங்களுக்கு பக்கத்து தெருவில் வசிப்பவன் என்ற உரிமையோடு இந்த விழாவில் நான் பங்கேற்க வந்திருக்கிறேன்.

ஆரம்பத்தில் 173 மாணவிகள்
173 மாணவிகளுடன் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் இன்று 7500 மாணவிகள் படித்து வருகிறார்கள். கவிஞர் பர்வீன் சுல்தானா இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என என்னை உரிமையோடு அழைத்ததால் தட்டாமல் வந்துள்ளேன். அது போல் எந்த நிகழ்ச்சிக்கு நான் பர்வீனை அழைத்தாலும் அவர் தவறாமல் பங்கேற்றார்.

உடனே போக வேண்டும்
உங்களுடைய ஆர்வத்தை, உங்களுடைய உற்சாகத்தைப் பார்க்கிறபோது, நீண்ட நேரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து நானும் பங்கேற்க வேண்டும், நீண்ட நேரம் உங்களுடன் அளாவிட வேண்டும் என்று ஆசை எனக்கு உண்டு. ஆனால் உடனடியாக நான் விமானத்தைப் பிடித்து திருச்சிக்குச் சென்று, கடந்த வாரம் திறந்து விட்ட மேட்டூர் அணை தண்ணீர் முறையாக நாகப்பட்டினம் வரைக்கும் செல்லுகிறதா என்று பார்வையிடுவதற்காக நானே நேரிலே செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

அனுமதி கேட்ட முதல்வர்
அதற்காகத் தான் நான் விரைவாக வந்து, விரைவாகவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, விரைவாகவே என் உரையை நிறைவு செய்து விடைபெற வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்திருக்கிறேன். அதற்கு நீங்கள் அனுமதி தரவேண்டும், தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று சொல்லி, என் உரையை நிறைவு செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications