சிஏஏ அமலுக்கு வர ‘மெயின்’ காரணமே அதிமுக தான்.. எடப்பாடி பழனிசாமியையும் ஒரு பிடி பிடித்த ஸ்டாலின்!
சென்னை: சிஏஏ சட்டம் நிறைவேறக் காரணமான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என கொந்தளித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றது. ஆனால் சிஏஏ சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடுமையான போராட்டங்கள் நடந்தன. இதுவரை விதிகள் அறிவிக்கப்படாததால், சட்டம் அமலுக்கு வரவில்லை.

சிஏஏ சட்டம் அமலுக்கு வந்தது: இந்நிலையில், சிஏஏ சட்டம் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு இன்று அறிவித்தது. மேலும், இதுதொடர்பான அறிவிக்கையையும் அரசிதழலில் வெளியிட்டது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், சிஏஏ சட்டத்தை பாஜக அரசு அமல்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிஏஏ சட்டத்தை அமல்படுத்தி இருப்பது, மத்திய பாஜக அரசுக்கு இந்துக்களின் ஆதரவை அதிகரிக்கும் எனக் கூறப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் மத்திய பாஜக அரசைக் கண்டித்துள்ளார்.
அதிமுகவை விளாசிய ஸ்டாலின்: அதோடு, சிஏஏ சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.பிக்களை குறிப்பிட்டு, சிஏஏ சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.கவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தக்க பாடம் புகட்டுவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்லாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றியது மத்திய பா.ஜ.க அரசு. அதனை திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது.
தக்க பாடம் கிடைக்கும்: அமைதியான இந்தியாவில் பிளவுகளை ஏற்படுத்தும் சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.கவையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.கவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்!" எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததுதான். அதிமுகவின் 11 எம்.பி.க்களும், அன்புமணி ராமதாஸும் ஆதரவாக வாக்களிக்காமல் இருந்திருந்தால், மசோதா நிறைவேற்றப்பட்டிருக்காது" என்று ஸ்டாலின் தொடர்ச்சியாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications