பனமரத்துல வவ்வாலா.. முதல்வருக்கே சவாலா..? கேமராவை தூக்கி ஸ்டாலின் அதகளம்! போட்டோகிராபர்கள் குதூகலம்!
சென்னை: இன்று உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, தனது இல்லத்தில் புகைப்படக் கலைஞர்களை படம் எடுத்து மகிழ்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நினைவுகளை காட்சிப் பேழைகளாக உறையவைப்பவை புகைப்படங்கள். உலக புகைப்பட தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. லூயிஸ் டகுரே என்பவர் புகைப்பட செயல்முறையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியதை நினைவுகூறும் வகையில் உலக புகைப்பட தினம் 1837ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் சிறந்த புகைப்படங்கள் போற்றப்படுகின்றன. புகைப்பட கலைஞர்கள் பாராட்டப் படுகிறார்கள். கருப்பு வெள்ளை புகைப்படங்கள் முதல் டிஜிட்டல் வரை இன்று நாம் புகைப்படங்களை விரும்பும் விதத்தில் மாற்றிக்கொள்ளும் தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. காலத்தை உறையவைக்கும் கலைஞர்களான புகைப்படக் கலைஞர்களைக் கொண்டாடும் நாளாக இன்றைய தினம் இருக்கிறது.
இந்நிலையில், இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலினின் இல்லத்தில் ஊடக செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் ஏராளமானோர் நின்றிருந்தனர். அப்போது வெளியே வந்த முதலமைச்சர் ஸ்டாலின், புகைப்படக் கலைஞர்களுக்கு உலக புகைப்பட தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதோடு, கேமராவை வாங்கி, தானே ஆங்கிள் பார்த்து, ஊடக புகைப்பட கலைஞர்களை போட்டோ எடுத்தார் முதல்வர் ஸ்டாலின். தொடர்ந்து, புகைப்படக் கலைஞர்களுடன் நின்று குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார்,
முதலமைச்சர் ஸ்டாலின், தங்களுக்கு புகைப்பட தின வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, அவரே கேமராவை வாங்கி, தங்களை புகைப்படம் எடுத்ததைக் கண்டு அங்கிருந்த போட்டோகிராஃபர்கள் நெகிழ்ந்தனர். முதல்வர் ஸ்டாலினை தாங்கள் பல்லாயிரக் கணக்கான புகைப்படங்கள் எடுத்திருந்தாலும், அவர் தங்களை எடுத்த இந்த போட்டோ ஸ்பெஷல் என்றார்கள் கேமராமேன்கள்.

உலகப் புகைப்பட தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், "நிகழ்வுகளை உறைய வைத்தும் - நிஜங்களைக் கலையாக்கியும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள்!" எனக் குறிப்பிட்டு, இன்று அவர் போட்டோ எடுத்த படத்தையும் பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications