பிரதமர் பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு.. அதிகமாக படி அளப்பது மாநில அரசுதான் - முதல்வர்
சென்னை: பிரதமரின் பெயரையும், ஸ்டிக்கரில் பிரதமரின் படத்தையும் தாங்கி செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, அதிக அளவில் நிதி பங்களிப்பது மாநில அரசுதான் என்று கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த திட்டங்களை தங்களுடையதாக மத்திய அரசு கூறிக்கொள்வதாக விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படி அளப்பது மாநில அரசுதான்!

படையப்பா படக் 'காமெடி' போல "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" எனச் சேலம் அரசுவிழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு மாண்புமிகு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும்.
அது தி இந்து நாளிதழில் செய்தியாக்கி, தரவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று முன்தினம் சேலம் சென்றிருந்த முதலமைச்சர், சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், மத்திய அரசு குறித்து இதே பாணியில் விமர்சித்திருந்தார். அதாவது,
"குடிநீர் திட்டமானாலும் சரி, வீடு கட்டும் திட்டமாக இருந்தாலும் சரி, மத்திய அரசு ஒதுக்கும் நிதியை வைத்து செயல்படுத்த முடியாது. அந்த திட்டங்களுக்கு மாநில அரசுதான் கூடுதல் நிதியை கொடுக்கிறது. பிரதமர் பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு 50% நிதியை மாநில அரசுதான் கொடுக்கிறது. மத்திய அரசின் எண்ணற்ற திட்டங்களுக்கு, மாநில அரசுதான் நிதி வழங்குகிறது.
நீங்கள் படையப்பா படத்தை பார்த்திருப்பீர்கள். அதில் மாப்பிள்ளை இவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை எனது கிடையாது என ஒரு டயலாக் வரும். அதுபோலத்தான் மத்திய அரசுக்கு, மாநில அரசு 50% நிதி ஒதுக்கினாலும், அதை தங்கள் திட்டமாக மத்திய அரசு மார்தட்டிக்கொள்கிறது.
ஆனால், தமிழகத்திற்கு எந்த சிறப்பு திட்டத்தையும் மத்திய அரசு தரவில்லை. சில திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியும் முழுமையாக வந்து சேர்வதில்லை. உதாரணத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை எடுத்துக்கொள்ளுங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டுவதாக அறிவித்தது. ஆனால், இன்னும் முடியவில்லை. 10 ஆண்டுகளாக கட்டுவதற்கு எய்ம்ஸ் என்ன விண்வெளி நிலையமா? முறையாக நிதி ஒதுக்கி இருந்தால் 2 ஆண்டுகளிலேயே எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடித்திருக்கலாம்.
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்!
— M.K.Stalin (@mkstalin) June 14, 2025
படையப்பா படக்… https://t.co/m9PbFg4Jhh pic.twitter.com/cFz2dQOU0s
அதே மதுரையை சுற்றி இந்த நான்கு ஆண்டுகளில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், உலக தரத்திலான ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம் என எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. இதுதான் திராவிட மாடலுக்கும் பாஜக மாடலுக்கும் உள்ள வித்தியாசம்" என்று விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications