3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.. தமிழக சட்டசபையில் விரைவில் தீர்மானம்- முதல்வர் ஸ்டாலின்
சென்னை: 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தமிழக சட்டசபையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி கடந்த ஆண்டு முதல் லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் பஞ்சாப், சண்டீகர், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 6 மாதங்களாக வீட்டிற்கு போகாமல் கடும் பனி, மழை, குளிர், வெயிலை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருகிறார்கள். மேலும் லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியுள்ளதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக டெல்லி போலீஸார் கவலை தெரிவித்தனர்.
விவசாயிகள் அழைப்பை ஏற்று மோடி பதவியேற்ற மே 26-ஐ தேசிய கறுப்பு நாளாகக் கடைபிடிப்போம்- திருமாவளவன்
மத்திய அரசு
இந்த நிலையில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். "மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை:
புறக்கணிப்பு
நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த "விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைச் சட்டம் 2020", "வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம் 2020","அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020" ஆகிய மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் தங்கள் போராட்டத்தைத் துவங்கி இன்றுடன் (26.5.2021) ஆறு மாத காலம் நிறைவு பெறுகிறது.
விவசாயிகள் போராட்டம்
இன்றளவும் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை - உணர்வுகளை மதித்து அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு ஒன்றிய அரசு இதுவரை முன்வரவும் இல்லை. ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வு காண்பதற்கும் முயற்சிக்கவில்லை என்பது கவலையளிப்பதாக இருக்கிறது.
தேர்தல் அறிக்கை
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், "இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி - இவற்றை ரத்து செய்திட ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்படும்" என்று தமிழக மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
Recommended Video
விவசாயிகள்
எனவே, டெல்லியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் தொடர்பாகத் திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.