மொத்தமாக மாறும் ரூல்ஸ்.. இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்.. மத்திய அரசின் அதிரடி விதிகள் அமல்
டெல்லி: இன்று மே 1ம் தேதி முதல் கேஸ் புக்கிங் விலை மற்றும் விலையில் மாற்றம் வந்துள்ளது அனைவருக்கும் தெரியும். ஆனால், இதையும் தாண்டி இன்று மே 1ம் தேதி முதல் இந்தியாவில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. குறிப்பாக ஆன்லைன் கேமிங் துறையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இன்று மே 1ம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் புக்கிங் விதிகளில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளது. புக்கிங் இடைவெளி தொடங்கி ஓடிபி வரை பல மாற்றங்கள் வந்துள்ளன. அதேபோல கேஸ் சிலிண்டர் விலையிலும் கூட இன்று மிகப் பெரிய மாற்றம் வந்துள்ளது. கேஸ் புக்கிங்கை தவிரவும் இன்று நாட்டில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகிறது.

புதிய விதிகள்
குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் நிதி இழப்புகள் மற்றும் மனநலப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், மத்திய அரசு ஆன்லைன் கேமிங் விதிகள் 2026-ஐ அமல்படுத்தியுள்ளது. இது இன்று மே 1 முதல் அமலுக்கு வருகிறது.. 2025ம் ஆண்டின் ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், அதாவது Promotion and Regulation of Online Gaming Act, 2025 இந்த புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
3 பிரிவுகள்
அதன்படி இனி இந்தியாவில் இயங்கும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் கண்காணிக்க 'இந்திய ஆன்லைன் கேமிங் ஆணையம்' (OGAI) என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஆன்லைன் விளையாட்டுகளை வகைப்படுத்துவதுடன், அவற்றின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்கும். புதிய விதிகளின் கீழ் விளையாட்டுகள் இனி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும்:
- ஆன்லைன் மணி கேம்ஸ்: பணம் அல்லது பரிசுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட விளையாட்டுகள்.
- ஆன்லைன் சோஷியல் கேம்ஸ்: பொழுதுபோக்கு மற்றும் சமூகத் தொடர்பிற்கான விளையாட்டுகள்.
- இ-ஸ்போர்ட்ஸ் (E-sports): தொழில்முறைப் போட்டி விளையாட்டுகள்.
கட்டுப்பாடுகள்
மேலும், பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் பல அதிரடி நடவடிக்கைகள் மே 1 முதல் கட்டாயமாக்கப்படுகின்றன. அதில் முதலாவது வயது கட்டுப்பாடு.. குறிப்பிட்ட வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் விளையாடுவதைத் தடுக்கத் தீவிரக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளது. குழந்தைகள் விளையாடுவதைப் பெற்றோர்கள் கண்காணிக்கும் வசதியும் வரவுள்ளது. இதன் மூலம் ஒரு நபர் ஒரு நாளில் எவ்வளவு நேரம் விளையாடலாம் என்பதற்கான நேர வரம்பை செட் செய்ய முடியும்.
அதிக ரிஸ்க் கொண்ட அல்லது அதிகப் பணப் பரிவர்த்தனை நடக்கும் கேமிங் தளங்கள் OGAIல் பதிவு செய்வது கட்டாயம். பணமோசடிகளைத் தவிர்க்க நிதிப் பரிவர்த்தனைகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாகக் கண்காணிக்கப்படும். இப்படி பல முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் செக்!
அதேபோல இதுவரை இந்தியச் சட்டங்களின் பிடியிலிருந்து தப்பித்து வந்த வெளிநாட்டு கேமிங் நிறுவனங்களுக்கு இனி சிக்கல்தான். அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், அவை இந்தியப் பயனர்களுக்குச் சேவை வழங்கினால், இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டே இயங்க வேண்டும் என்பதும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் கேம் என்பது முதலில் மிக கேசுவலாக தொடங்கினாலும் அவை சீக்கிரமே பெரிய சிக்கலாக மாறிவிட்டது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது மற்றும் அதன் மூலம் ஏற்படும் பண இழப்புகள் இன்று பெரும் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அரசின் இந்தப் புதிய கட்டுப்பாடுகள் கேமிங் துறையை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வரும் என நம்பலாம்.!












Click it and Unblock the Notifications