உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைய வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை!
சென்னை: உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைய வேண்டும் என உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழி ஆக்கப்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளிவிழாவில் உரையாற்றிய போது அவர் இத்தகைய கோரிக்கைகளை முன் வைத்தார்.
மேலும் அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;

உச்சநீதிமன்ற கிளை
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பங்கேற்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில் எனது சில கோரிக்கைகளை முன்வைக்கவும் நான் விரும்புகிறேன். பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் கிளை, சென்னையில் அமைய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழி ஆக்கப்பட வேண்டும்.

மீண்டும் நினைவூட்டுகிறேன்
இவை சட்டத்தின் ஆட்சியில் மக்களின் கோரிக்கைகளாக இவை அமைந்துள்ளன. இக்கோரிக்கைகளை சில மாதங்கள் முன்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் நான் முன் வைத்தவைதான். இருப்பினும் மீண்டும் அவற்றை இங்கு வலியுறுத்த, நினைவூட்ட நான் விரும்புகிறேன்.

சட்டத்தின் அரசாக
இங்கு வந்து கௌரவித்துள்ள மாண்பமை நீதிபதிகள் அவற்றை தமிழ்நாட்டிற்கு நிறைவேற்றித்தரவும் உங்கள் அனைவரின் சார்பில் நான் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நீதித்துறையைப் பொறுத்தவரை நான் இங்கே கோரிக்கை வைப்பவனாகத்தான் வந்திருக்கிறேன் என்பதை நீதியரசர்கள் அறிவார்கள் என்று நான் நம்புகிறேன். சட்டத்தின் அரசாக - நீதியின் அரசாக - அதுவும் சமூகநீதியின் அரசாக அமைவதுதான் மக்களின் அரசாக அமைய முடியும்.

எல்லோர்க்கும் எல்லாம்
'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற சமூகநீதித் தத்துவத்தை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை நாங்கள் நடத்தி வருகிறோம். மக்களுக்கு இன்றைய தேவை என்ன என்பது மட்டுமல்ல, முக்கியமாக நீதி மட்டும்தான் என்பதை நாங்கள் அறிவோம். உலகப் பொருளாதார மேதையான அமர்த்தியா சென் அவர்கள் கூறுகிறார். அவர் The idea of justice என்ற புத்தகத்தில், "நீதியை உருவாக்கிக் கொடுப்பதும் - அநீதி எற்படாமல் தடுப்பதும் - ஆகிய இரண்டும் முக்கியமானது" என்கிறார். அத்தகைய சூழ்நிலையை உருவாக்கவே நாங்கள் செயலாற்றி வருகிறோம்.












Click it and Unblock the Notifications