தவெகவை சரமாரியாக தாக்கிய ஸ்டாலின்.. சட்டசபை அவைக்குறிப்பில் அச்சேறிய TVK வரலாறு.. ட்விஸ்ட்!
சென்னை: கரூர் சம்பவத்திற்கு திமுக மீது தவெகவினர் இணையத்தில் புகார்களை வைத்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக தவெகவை நேரடியாக விமர்சனம் செய்து சட்டசபையில் பேசி உள்ளார். விஜய், புஸ்ஸி ஆனந்த் பெயரை குறிப்பிடாமல் தமிழக வெற்றிக் கழக பெயரை குறிப்பிட்டு கட்சியை விமர்சனம் செய்து ஸ்டாலின் பேசி உள்ளார்.
இதனால் அரசின் சட்டசபை ஆவணங்களில் தவெகவின் கரூர் சம்பவம் குறித்த கருத்துக்கள் அதிகாரபூர்வமாக பதிவாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பேச்சு காரணமாக இந்த கருத்துக்கள் இனி காலம் முழுக்க அரசு ஆவணங்களில் இருக்கும்.

முதல்வர் ஸ்டாலின் - தவெக அட்டாக்
முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் பேசுகையில், கரூர் தவெக பரப்புரை நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாடு அரசே காப்பாற்றியது. நான் எனது 50 ஆண்டு காலப் பொது வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். பார்த்திருக்கிறேன். இங்குள்ள அனைத்து அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் இத்தகைய அனுபவம் கொண்டவர்கள்தான். மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள். போராட்டங்கள் நடத்துபவர்கள் அதற்குரிய சட்ட திட்டங்களுக்கும், நெறிமுறைகளுக்கும், பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அப்படித்தான் நடத்த வேண்டும்.
கட்டுப்பாடுகளை மீறும் போது, அதனால் பாதிக்கப்படுவது நிகழ்ச்சி நடத்தும் கட்சியின் தொண்டர்கள்தான். அதனை மனதில் வைத்து பொறுப்போடு செயல்பட வேண்டும். வழக்கமான அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட கரூர் தவெக பரப்புரையில் கூடுதலாகவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவலர்கள், அதிகாரிகள் என அன்று மொத்தம் 606 பேர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
கரூர் கூட்டம் - தவெக தவறு
கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவை கரூரில் செய்யப்படவில்லை. காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை. உணவு வழங்க எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை. அதே இடத்தில் 2 தினங்களுக்கு முன்பு அதிமுக நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தனர். கட்டுப்பாட்டோடு நடந்துக் கொண்டனர்.
கரூரில் தொண்டர்கள் - கட்சியினர் இடையே கட்டுப்பாடு இல்லாததே காரணம். கரூர் துயர சம்பவம் நடந்த அதே இடத்தில் 2 நாட்களுக்கு முன் அதிமுகவின் கூட்டம் நட்டதுள்ளது. அங்கு கூடியவர்கள் மிகவும்கட்டுப்பாட்டுடன் கூடி கலைந்தனர். இதற்கு நேர்மாறாக தவெக கூட்டத்தில் நடந்துள்ளது
கரூரில் செப்.27 ஆம் தேதி தவெக தலைவரின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது. அக்கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் இதற்கான அனுமதி கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருப்பதாலும், பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதாலும், பாதுகாப்புக் காரணங்களாலும் அனுமதி வழங்கவில்லை . லைட் ஹவுஸ் கார்னர் / உழவர் சந்தை பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவுக்கும், கூட்ட அளவு மதிப்பீடு மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் அனுமதி வழங்க இயலவில்லை.
கரூர் பரப்புரைக்கு தவெக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட 12 மணியைக் கடந்து 7 மணிநேரம் தாமதமாக தவெக தலைவர் வந்துள்ளார். இதுதான் நெரிசலுக்கு காரணம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications