சிட்கோ தொழிற்பேட்டை முதல் நீதிமன்ற வளாகம் வரை.. கள்ளக்குறிச்சிக்கு ஸ்டாலின் வெளியிட்ட 8 அறிவிப்புகள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு என்று புதிதாக 8 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். புதிய சிட்கோ தொழிற்பேட்டை முதல் புதிய தீயணைப்பு கட்டயம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின், உளுந்தூர்பேட்டையில் உள்ள தோல் அல்லா தொழிற்சாலையை பார்வையிட்டார். இதையடுத்து புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்திருக்கிறார்.

இதையடுத்து கள்ளக்குறிச்சியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, ரிஷிவந்தியத்தில் ரூ.6.50 கோடி மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றியம் கட்டடம் கட்டப்படும். அதேபோல் உளுந்தூர்பேட்டையில் புதியதாக உருவாக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.18 கோடியில் புதிய கல்லூரி கட்டடம் கட்டப்படும் என்று அறிவித்தார்.
தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை சேந்தநாடு கிராமத்தில் 50 ஏக்கரில் ரூ.10 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றும், சங்கராபுரம் மக்களுக்காக புதுபாலப்பட்டில் ரூ.18.50 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும் என்றும், சின்னசேலம் வட்டத்தில் ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் புதிய தீயணைப்பு மீட்பு பணிகள் கட்டடம் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.
அதேபோல் திருக்கோவிலூர் பகுதி விவசாயிகள் நலனுக்காக அரியூர் பகுதியில் ரூ.5.04 கோடி மதிப்பீட்டில் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என்றும், கல்வராயன் மலைப்பகுதி பழங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் மகளிர் விடியல் பயணம் விரிவுபடுத்தப்படும் என்றும், புதியதாக அமைக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ரூ.120 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் குடியிருப்புகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.












Click it and Unblock the Notifications