பேசும்போதே உடைந்து அழுது.. கண்ணீர்விட்ட இஸ்லாமிய பெண்! முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்! என்ன நடந்தது?
சென்னை: காஞ்சிபுரத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட கிராம சபை கூட்ட நிகழ்ச்சியில் அவரிடம் இஸ்லாமிய பெண்மணி ஒருவர் உருக்கமான கோரிக்கையை வைத்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் விதி 110-ன்கீழ், முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேசினார். இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக அவர் அளித்த அறிக்கையில், குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, மார்ச் 22, நவம்பர் 1-ல் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக இன்று காஞ்சிபுரத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. நாடுமுழுவதும் இன்று பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு கிராச சபை கூட்டம் நடைபெற்றது.

மோடி கிராமசபை
காஷ்மீரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்கோடு கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதற்காக நேற்று இரவே அவர் ஸ்ரீபெரும்புதூர் சென்றுவிட்டார். இன்று காலை செங்கோடு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு மக்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பெண்கள் என்ன சொன்னார்கள்?
இந்த கூட்டத்தில் பெண்கள் பலர் முதல்வர் ஸ்டாலினிடம் தைரியமாக கேள்விகளை எழுப்பினர். தங்கள் குறைகளை முதல்வர் முன்னிலையில் பெண்கள் பலர் எடுத்து வைத்தனர். இதில் பேசிய இஸ்லாமிய பெண்மணி ஒருவர், என்னுடைய கணவர் 2020 அக்டோபர் 2ம் தேதி இறந்துவிட்டார். எனக்கு 3 பிள்ளைகள் இருக்கிறார்கள். எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. நான் விடோ.. இப்போது கஷ்டப்படுகிறேன் என்று குறிப்பிட்டார்.

முதல்வர் ஸ்டாலின்
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், உங்கள் கணவர் எப்படி இறந்தார் என்று கேட்டார். அதற்கு அந்த பெண்மணி, கொரோனாதான் ஐயா.. மூன்று பிள்ளைங்க எனக்கு என்று கூறி அங்கேயே கண்ணீர்விட தொடங்கினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின்.. இல்லை இல்லை அழாதீங்க.. நீங்கள் மனு கொடுத்து இருக்கீங்களா என்று கேட்டார். அதற்கு மனு கொடுக்கவில்லை. இனிதான் ஆட்சியரை பார்த்து மனு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். உடனே முதல்வர் ஸ்டாலின்.. நீங்கள் மனு கொடுங்கள்.
Recommended Video

மனு கொடுங்கள்
நான் என்னவென்று பார்க்க சொல்கிறேன். கவலைப்பட வேண்டாம். கண்ணீர் விடாதீர்கள் என்று கூறினார். நீங்கள் என்னிடம் கொடுத்த மனுக்கள் பற்றி கவலைப்பட வேண்டாம். இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கூறுவேன். நானே இதை நேரடியாக ஆய்வு செய்வேன். தேவைப்பட்டால் நேரில் வந்து நானே எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரிப்பேன், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications