அவசர ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின்.. வீடியோ கான்ஃபரன்சிங்கில் இணைந்த ஆ.ராசா! உஷார் மோடில் நீலகிரி!
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து வரும் நிலையில், எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையொட்டி சில பகுதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கோவையில் வால்பாறை, நீலகிரியில் குந்தா, கூடலூர், பந்தலூர், உதகை ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, வரும் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இது லேசானது முதல் மிதமான மழையாக இருக்கும். குறிப்பாக நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பருவமழை பாதிப்புகள், நீலகிரி மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள், மீட்புப் பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, நீலகிரி எஸ்.பி சுந்தரவடிவேல் உள்ளிட்டோர் காணொளிக் காட்சி வாயிலாக பங்கேற்றனர். மேலும், நீலகிரி எம்.பி ஆ.ராசாவும் பங்கேற்றார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர். எஸ்.கே. பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மழை தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய முன்னறிவிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரைகள் வழங்கி உள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை குறித்து, கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டவர்களுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் - நிவாரணப் பணிகள் குறித்த உத்தரவுகளைத் தொலைபேசி வாயிலாக வழங்கிக் கொண்டிருந்தேன்.
மழை தொடர்ந்து வரும் நிலையில், எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு செய்தேன்." எனத் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications