நானே வர்றேன்.. கண்ட்ரோல் ரூமில் ஸ்டாலின்.. போனை எடுத்து மக்களின் புகார்களை கேட்ட முதல்வர்! ஆஹா!
சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்றுக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வருகிறது.

நேற்று இரவு விடாமல் பெய்த கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சில பகுதிகளில் வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் மழை தொடர்பான கட்டணமில்லா புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்புகளில் மக்களின் குறைகளைக் கேட்டு முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு பதிலளித்தார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், அமைச்சர் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆய்வின் போது மழை நீர் அகற்றம் தொடர்பாக சென்னை முழுவதும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாநகராட்சி மேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
முன்னதாக, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சென்னை நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, மழைநீரை அகற்றும் பணிகளை துரிதப்படுத்தினர். மேயர் பிரியா நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பயனாக, பெரும்பாலான இடங்களில் தேங்கி இருந்த மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications