நான் ஆட்சிக்கு வந்த பிறகு என் மீது நிறைய பழிகள்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
சென்னை: நான் ஆட்சிக்கு வந்த பிறகு என் மீது நிறைய பழி சுமத்தப்பட்டன என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள எவர்வின் பள்ளி மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், கொளத்தூர் தொகுதிக்கு வரும் போது பெருமை, சிறப்பு. வரவேற்பு கிடைக்கிறது. எனக்கொரு திருப்தி ஏற்படுகிறது.
மக்கள் இல்லை என்றால் நானும் இல்லை, திமுகவும் இல்லை. கல்விக்கும் மருத்துவத்துக்கும் அதிகளவில் அக்கறை செலுத்தி வருகிறோம். எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி எதுவாக இருந்தாலும் எப்போதும் உங்களில் ஒருவனாக இருக்கக் கூடியவன் நான். 3 முறை தொடர்ந்து கொளத்தூரில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எம்எல்ஏ, எதிர்க்கட்சித் தலைவர், தற்போது முதல்வர் என்ற பொறுப்பை பெற்றுள்ளேன்.

முதல்வர் ஆன பிறகு என் மீது நிறைய பழி சுமத்தப்பட்டுள்ளன. நீட் தேர்வால் அரியலூரில் அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றிருந்தாலும் மருத்துவம் பயில முடியவில்லை. பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அனிதா அச்சீவர்ஸ் அகாதெமியை கொளத்தூரில் தொடங்கி வைத்துள்ளேன்.
பெண்கள் படித்த படிப்பிற்கு தேவையான பயிற்சிகளை கொடுத்து வருகிறோம். அந்த அகாதெமியில் பயிற்சி பெற்ற 349 பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை வைத்து பெண்கள் அவர்களின் வாழ்க்கையை நடத்தி கொள்ளலாம்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏழை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடக் கூடிய இயக்கம்தான் திமுக என்றார். இந்த விழாவில் திமுக நிர்வாகிகளுக்கு பொற்கிழியை கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications