என்ன சமையல்?.. சென்னை போரூர் அம்மா உணவகத்தில் ஆய்வு.. உணவையும் ருசி பார்த்த முதல்வர்
சென்னை: சென்னையில் போரூரில் அம்மா உணவகத்தில் மு.க.ஸ்டாலின் அங்கு தயாரிக்கப்பட்ட உணவை ருசித்து ஆய்வு செய்தார்.
Recommended Video
சென்னையில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் திநகர், வேளச்சேரி, நுங்கம்பாக்கம், மேற்கு மாம்பலம், புளியந்தோப்பு, ராயபுரம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
வடசென்னையில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளதால் தங்குவதற்கும் உணவு சமைக்கவும் வழியில்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆற்றின் கரையோர மக்களும் மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ள மக்களுக்கென சென்னையில் 160 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வெள்ளம்
நிவாரண முகாம்களிலும் வெள்ளம் பாதித்த பகுதிகளையும் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி இன்றைய தினம் 3ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் போரூர் ஏரியை ஆய்வு செய்ய சென்ற முதல்வர் ஸ்டாலின் நேராக அவ்வழியாக இருந்த அம்மா உணவகத்திற்கு சென்றார்.

சமையலர்
அங்கு உணவை ஆய்வு செய்த அவர் அங்கிருந்த சமையலரிடம் என்ன சமையல் செய்துள்ளீர்கள் என கேட்டார். உடனே அந்த சமையலர் உணவை கொண்டு வந்து கொடுத்தார். சிறிது அளவு உணவை சாப்பிட்ட முதல்வர் நன்றாக இருக்கிறதும்மா என தெரிவித்தார். இதையடுத்து இதே போல் தரமான உணவை பொதுமக்களுக்கு தர வேண்டும் என அறிவுறுத்தினார்.

திமுக ஆட்சி
பொதுவாக அதிமுக, திமுக என யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒருவர் கொண்டு வந்த திட்டத்தின் பெயரை மாற்றி தங்கள் திட்டமாக்குவதும் அதை ரத்து செய்வதும் நடக்கும். அது போல் திமுக தேர்தல் அறிக்கையில் கலைஞர் உணவகம் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்படும். இதையடுத்து திமுக சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்தது.

கலைஞர் உணவகம்
இதனால் அம்மா உணவகம் கலைஞர் உணவகமாக மாற்றிவிடுவார்கள் என அனைவரும் கருதினர். ஆனால் திமுக வென்றவுடன் அம்மா உணவகத்தை சூறையாடிய திமுக நிர்வாகிகள் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்ற நம்பிக்கையை ஏழை மக்களுக்கு கொடுத்தார்.

முன்னாள் முதல்வர்
முதல்வரை போல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மழை பாதிப்பு பணிகளை பார்வையிட்டு வருகிறார். இன்று 2ஆவது நாளாக அவர் பார்வையிட்ட போது அம்மா உணவகம் மூலம் கொரோனா காலத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் உணவு அருந்தினர். ஆனால் அந்த உணவகத்தை திமுக அரசு மூடுவதற்கு முயற்சி செய்துள்ளது என குற்றம்சாட்டினார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அம்மா உணவகத்தில் உணவின் தரத்தை ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications