சுடச்சுட சாம்பார் சாதம்.. நிவாரண முகாமில் உணவை சாப்பிட்டு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சென்னையில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு தயாரிக்கப்பட்ட உணவை ருசித்து பார்த்தார்.
சென்னையில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் திநகர், வேளச்சேரி, நுங்கம்பாக்கம், மேற்கு மாம்பலம், புளியந்தோப்பு, ராயபுரம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
வடசென்னையில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளதால் தங்குவதற்கும் உணவு சமைக்கவும் வழியில்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆற்றின் கரையோர மக்களும் மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ள மக்களுக்கென சென்னையில் 100 -க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மக்களுக்கு உணவு
இந்த முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவை அரசே தயாரித்து வழங்குகிறது. சிங்கார சென்னையாக மாற்றுவதற்கான உத்திகளை கையாண்டு வரும் நிலையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் சென்னையை முதல்வர் ஸ்டாலின் இன்று 3ஆவது முறையாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

நிவாரண உதவிகள்
வடசென்னையில் புளியந்தோப்பு, பெரம்பூர், ஆட்டுத் தொட்டி, கொளத்தூர், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். சிவப்பு நிற ஜீப்பில் கருப்பு நிற ரெயின் கோர்ட் அணிந்து கொண்டு மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து வருகிறார்.

உணவு
இந்த நிலையில் நேற்றைய தினம் 2ஆவது நாளாக துறைமுகம், கல்யாணபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமை ஆய்வு செய்தார். இன்றைய தினம் போரூர், ஆர் கே நகர், கொளத்தூர் முகாம்களில் பார்வையிட்ட அவர் அங்கு தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்டு பார்த்தார். நிவாரண முகாமில் இருக்கும் மக்களுக்காக சாம்பார் சாதம் தயாரிக்கப்பட்டிருந்தது. அதைத்தான் முதல்வர் ருசி பார்த்தார்.

பிரிஞ்சி சாதம்
பின்னர் கொளத்தூரில் பிரிஞ்சி சாதம் இருந்தது. அதையும் முதல்வர் ஸ்டாலின் சாப்பிட்டு ஆய்வு செய்தார். பின்னர் உணவின் ருசி நன்றாக இருப்பதாக தலையை அசைத்து சொன்னார். இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வெள்ள பாதிப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications