எனக்கு ரெஸ்டா.. மருத்துவமனையில் இருந்தபடி.. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை ஆய்வு செய்த முதல்வர்!
சென்னை: அரசுப் பணிகள் குறித்து அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தவாறே முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து தலைமைச் செயலாளருடன் ஆலோசித்த முதல்வர் ஸ்டாலின், இந்த திட்டத்தில் பெறும் மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முதல்வர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக பயணித்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின், மக்களை ரோடு ஷோ நடத்தி சந்தித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்டாலின் நேரடியாக நடந்து சென்றே மக்களைச் சந்தித்தது நல்ல வரவேற்பைப் பெற்றது.

மருத்துவமனையில் முதல்வர்
முதல்வரின் உடல்நிலைக் குறித்த வதந்திகளுக்கு இந்த ரோடு ஷோ முற்றுப்புள்ளியாகவும் அமைந்தது. இந்த நிலையில் நேற்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்ட போது, அவருக்கு திடீரென லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதன் காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது திமுகவினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
மருத்துவமனை அறிக்கை
இதன்பின் அப்பல்லோ மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு வேறு சில பரிசோதனைகள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்தபடி அரசுப் பணிகளை முதல்வர் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
உடல்நலம் விசாரித்த மு.க.அழகிரி
இன்று காலை மருத்துவப் பரிசோதனைக்காக தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்டார். இதன்பின் பரிசோதனை எடுக்கப்பட்ட பின், மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஸ்டாலினை சந்திக்க அவரின் சகோதரர் மு.க.அழகிரி மருத்துவமனைக்கு வந்து உடல்நலம் விசாரித்தார்.
முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
அதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 3 நாட்களில் முதல்வர் ஸ்டாலின் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அரசுப் பணிகள் குறித்து மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாகத் தெரிய வந்துள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து தலைமைச் செயலாளருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
ஸ்டாலின் ஆய்வு
அதேபோல் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறும் மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தவாறே ஸ்டாலின் அரசுப் பணிகளைச் செய்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் திமுகவினர் மத்தியில் நிம்மதியைக் கொடுத்துள்ளது.
ஸ்டாலின் பதிவு
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை. தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications