உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலம்! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: உக்ரைனிலிருந்து தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர, சம்பந்தப்பட்ட மத்தியச் சட்டங்களில் தேவையான திருத்தங்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் வருமாறு;

மருத்துவ மாணவர்கள்
உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் நிலை குறித்து மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன், மேலும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மக்களவையில் பதில்
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியதில், "ஏதேனும் இந்திய மருத்துவ நிறுவனம் அல்லது பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மருத்துவ மாணவர்களை இடமாற்றம் செய்யவோ அல்லது தங்க வைக்கவோ தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எந்த அனுமதியும் வழங்கவில்லை.'' எனக் கூறியிருந்தார். ஒரு மாநிலத்தில் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளின் குறிப்பிட்ட சூழலில் இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், இது மாணவர்களின் எதிர்காலத்தோடு தொடர்பு உடையது என்பதால் நான் அதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

2000 மாணவர்கள்
உக்ரைன் ரஷ்யா இடையேயான மோதலின் தொடக்கத்திலிருந்து, உக்ரைனில் இருந்து சுமார் 2000 மருத்துவ மாணவர்கள் தமிழ்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர், இது நம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய எண்ணிக்கையில் ஒன்றாகும். உக்ரைனின் தற்போதைய சூழ்நிலையில், இந்த மருத்துவ மாணவர்கள் உடனடியாக உக்ரைனில் உள்ள தங்கள் கல்லூரிகளுக்குத் திரும்புவது நடைமுறையில் சாத்தியமற்றதோடு போர் நிறுத்தப்பட்ட பின்னரும் நிச்சயமற்ற தன்மை நிலவலாம். இதைக் கருத்தில் கொண்டு, இந்த மாணவர்களை இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளில் உள்ள பொருத்தமான பல்கலைக்கழகங்களிலோ படிக்க வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழகம் உங்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

சட்டத்திருத்தம்
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் படிப்பைத் தொடர்வதற்கு மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்காததால் மாணவர்கள் மத்தியில் ஏமாற்றம் உள்ளது. எனவே, இந்த மாணவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர, சம்பந்தப்பட்ட மத்தியச் சட்டங்களில் தேவையான திருத்தங்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும், NMC மற்றும் மத்திய அமைச்சகங்களுக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
Recommended Video

அரசு ஒத்துழைக்கும்
ஏற்கனவே ஏற்பட்டுள்ள காலதாமதத்தை கருத்தில் கொண்டு, இவ்விவகாரத்தில் தங்களின் அவசரத் தலையீட்டைக் கோருகிறேன். இந்தப் பிரச்னையில் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று உறுதியளிக்கிறேன்.












Click it and Unblock the Notifications