அப்ப வாரம் 2 நாள்! இப்ப 10 நாட்களுக்கு ஒரு முறை! அவ்வளவு பணிச்சுமை எனக்கு! முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சென்னை: எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தனது கொளத்தூர் தொகுதிக்கு வாரம் 2 நாட்கள் வந்து சென்றதாகவும் இப்போது தனக்கிருக்கும் பணிச்சுமை காரணமாக பத்து நாட்களுக்கு ஒரு முறை வந்து செல்வதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கழக முன்னோடிகள் இல்லையென்றால் கட்சியே இல்லை என்றும் அவர் நினைவுகூர்ந்து பேசினார்.
அதன் விவரம் வருமாறு;
குடியரசுத் தேர்தலில் திமுக வியூகம் என்ன? கூட்டத்தை கூட்டிய ஸ்டாலின்.. பரபர ஆலோசனை! ஸ்கெட்ச் யாருக்கு
வாரம் 2 நாட்கள்
''கொளத்தூர் தொகுதியிலிருந்து நான் மூன்று முறை உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சி வரிசையில் இருந்த நேரத்தில், என்னதான் தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணம் நடத்திக் கொண்டிருந்தாலும் கட்சியினுடைய பணியின் காரணமாக பல்வேறு கழகத் தோழரின் இல்லங்களில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளில், பொதுக்கூட்டங்களில், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய அந்த வாய்ப்பில் நான் ஈடுபட்டிருந்தாலும், எப்படியும் வாரத்திற்கு இரண்டு முறை இந்தத் தொகுதிக்கு நான் வராமல் இருந்ததில்லை.''
10 நாட்களுக்கு ஒரு முறை
''இப்பொழுது முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற காரணத்தில் இன்னும் எவ்வளவு பளு, எவ்வளவு பணி உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே, இந்த சூழ்நிலையிலும், எப்படி எதிர்க்கட்சி வரிசையில் இருந்த நேரத்தில் நான் பணியாற்றி இருக்கிறேனோ, அதைவிட இன்னும் அதிகமாக இந்தத் தொகுதிக்கு பணியாற்றிட வேண்டும் என்று விரும்பக்கூடிய நிலையில் இருந்தாலும், எப்படியாவது பத்து நாளைக்கு ஒரு முறையாவது இந்த தொகுதிக்கு வர வேண்டும் என்று முடிவு செய்து அந்த பணியை நிறைவேற்றி வருகிறேன்.''
பெருமை -வரவேற்பு
''எத்தனையோ நிகழ்ச்சிகளில், எத்தனையோ விழாக்களில் நான் கலந்து கொள்கிறபோது எனக்கு உரிய அந்த வரவேற்பு, உரிய அந்த உபசரிப்பு இவைகளெல்லாம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதெல்லாம் எனக்கு பெருமையாக இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி இந்தக் கொளத்தூர் தொகுதிக்கு வருகிறபோது இன்னும் அதிகமான அளவிற்கு எனக்கு பெருமை, வரவேற்பு கிடைக்கிறது.''
முன்னோடிகள்
''கழக முன்னோடிகள் இல்லையென்றால் மேயர் இல்லை, சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. ஏன் இந்தக் கட்சியே இல்லை. நம்முடைய ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் எல்லாத் திட்டங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருந்தாலும், எல்லாத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகளை நாம் செய்து கொண்டிருந்தாலும், கல்விக்கும் மருத்துவத்துக்கும் நாம் அதிகமான அளவிற்கு அக்கறை செலுத்தி கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.''