"நீதிக்கட்சி போட்ட விதை தான் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க காரணம்.." முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்து விளங்க என்ன காரணம் என்பதை விளக்கிப் பேசியுள்ளார்.
திருச்சி விமான நிலையம் உட்பட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கப் பிரதமர் மோடி இன்று திருச்சி வந்தடைந்தார். திருச்சியில் விமான போக்குவரத்தை மேம்படுத்த ரூ.1,200 கோடி செலவில் அங்கே புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டப்பட்டது. அதைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இது மட்டுமின்றி ரூ.19,850 கோடியில் தமிழ்நாட்டில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், பல திட்டங்களைத் தொடங்கியும் வைத்தார், தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொண்டார். அங்கே மாணவர்களுக்கு அவர் பட்டம் வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின்: இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சியில் போடப்பட்ட விதையே இன்று தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கக் காரணம் என்று தெரிவித்தார். இந்த விழாவில் முதலில் ஆங்கிலத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழக மக்கள் சார்பில் அவரை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
நீதிக்கட்சி போட்ட விதை: தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம், தமிழ்நாடு! 'கல்வியில் சிறந்த' என்ற எந்தப் பட்டியல் எடுத்தாலும், அதில் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்கள்தான் அதிகமாக இடம்பெற்றிருக்கும். 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் கல்விக்காகப் போடப்பட்ட விதைதான், இன்றைக்கு வளர்ந்து, கல்வியில் சிறந்த மாநிலமாக, நாம் உயர்ந்து நிற்கிறோம்.
நமது திராவிட மாடல் அரசு, அனைவருக்கும் கல்வி - அனைவருக்கும் கல்லூரிக் கல்வி - அனைவருக்கும் ஆராய்ச்சிக் கல்வி என்ற இலக்கோடுதான் சமூகநீதிப் புரட்சியைக் கல்வித் துறையில் நடத்தி வருகிறது. "இன்னார்தான் படிக்க வேண்டும்" என்று இருந்த நிலையை மாற்றி, அனைவருக்கும் அனைத்துவிதமான வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறோம்.
பல்வேறு திட்டங்கள்: தமிழ்நாட்டு மாணவர்களை - படிப்பிலும், வாழ்க்கையிலும் வெற்றியாளராக்குவதற்கு "நான் முதல்வன்" திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. உயர்கல்வி மாணவர்களின் சிந்தனைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், "CM Research Grant Scheme", உயர்கல்வி மாணவர்களின் சிந்தனைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், "CM Fellowship Program" ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
பெண்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்" எனும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரிக்குள் நுழையும் 3 லட்சத்து 45 ஆயிரத்து 362 மாணவியருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது" என்று தமிழக அரசு கல்வித்துறையில் எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுப் பேசினார்.
நெட்டிசன்கள்: குறிப்பாக சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நாடு அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சியில் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போது அனைத்து தரப்பினரும் கல்வி கற்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது அப்போது பலர் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. இதை முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுப் பேசிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications