இதயமே நொறுங்கிவிட்டது.. மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி பலாத்காரம்.. முதல்வர் ஸ்டாலின் வேதனை!
சென்னை: மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூரமான வன்முறைச் சம்பவத்தால் தனது இதயம் நொறுங்கிப் போய்விட்டதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் மைத்தேயி இனத்தவர் தங்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக கடந்த மே மாதம் ஏற்பட்ட கவலரம் மணிப்பூரில் தற்போது வரை நீடிக்கிறது.

இந்நிலையில், காங்போக்பி மாவட்டத்தில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை, மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு பெண்களையும் அந்தக் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவின் கீழ் குற்றவாளிகளுக்கு எதிராக நோங்போக் செக்மாய் காவல் நிலையத்தில் மே 18 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மணிப்பூரில் நடைபெற்ற இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து வேதனையுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர வன்முறை செயலின் வீடியோவை பார்த்து இதயம் நொறுங்கிப் போயுள்ளேன். நமது கூட்டு மனசாட்சி எங்கே? இந்த வெறுப்பும், விஷமும் சேர்ந்த பிரச்சாரம் மனித குலத்தின் ஆன்மாவையே வேரோடு பிடுங்குகிறது.
இந்த அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நின்று, சிறந்த சமுதாயத்தை வளர்ப்பதற்கு உழைக்க வேண்டும். மணிப்பூரில் நிகழும் கொடூர வன்முறைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும்" என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications