இறைத் தலங்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறோம்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை: இறைத் தலங்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கிராமப்புறக் கோயிலாக இருந்தாலும் - ஏழ்மையான கோயிலாக இருந்தாலும் - ஆதிதிராவிடர் பகுதியில் இருக்கும் கோயிலாக இருந்தாலும் - அனைத்தையும் ஒன்று போலக் கருதி, உதவி செய்யக்கூடிய அரசுதான் திராவிட மாடல் அரசு என அவர் பேசியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற இந்துசமய அறநிலையத்துறை விழாவில் அவர் பேசியதாவது;

கோயில் திருப்பணி
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 43 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. தற்போது வரை 3986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களைப் பழமை மாறாமல் சீர்செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

1250 கிராமப்புற கோயில்கள்
1250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் மற்றும் 1250 கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணிகளையும் சேர்த்து, இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதைத்தான் நம்முடைய அரசு விரும்புகிறது, இதுதான் நம்முடைய அரசினுடைய நோக்கம்.

கோயில்கள் கலைச் சின்னங்கள்
கோயில்கள் நமது கலைச் சின்னங்களாக, பண்பாட்டுச் சின்னங்களாக இருக்கின்றன. நமது சிற்பத்திறமைக்கான சாட்சியங்களாக இருக்கின்றன. நமது கலைத் திறமைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே, கண்ணும் கருத்துமாக அதைக் காப்பது நம்முடைய அரசினுடைய கடமை என்று எண்ணிச் இன்றைக்கு நாம் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். அத்தகைய கோயில்கள் சமத்துவம் உலவும் இடங்களாக அமைய வேண்டும் என்பதிலே நமது முழு கவனம் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது.

கோயில்களிலும் வேறுபாடு
மனிதர்களில் மட்டுமல்ல கோயில்களிலும் நகரக் கோவில் - கிராமக் கோவில் என்றும் - பணக்காரக் கோயில் - ஏழை கோவில் என்றும் வேறுபடுத்திச் சொல்லப்படுகிறது. கிராமப்புறக் கோயிலாக இருந்தாலும் - ஏழ்மையான கோயிலாக இருந்தாலும் - ஆதிதிராவிடர் பகுதியில் இருக்கும் கோயிலாக இருந்தாலும் - அனைத்தையும் ஒன்று போலக் கருதி, உதவி செய்யக்கூடிய அரசுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு.

இறைத் தலங்கள்
மதம் - சாதி வேற்றுமை மட்டுமல்ல - கோயில் - சாமி வேற்றுமையும் இந்த அரசுக்கு இல்லை. அனைத்து இறைத் தலங்களையும் கண்ணும் கருத்துமாக நாம் இன்றைக்கு கவனித்து வருகிறோம். அதனால்தான் இந்த மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய சமயச் சான்றோர்கள் மட்டுமல்ல, இன்னும் பலரும் இந்த அரசை ஆதரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications