“மாநில சுயாட்சி”.. அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்த முதல்வர் ஸ்டாலின்.. சட்டப்பேரவையில் நாளை தீர்மானம்!
சென்னை: சட்டப்பேரவையில் நாளை முக்கிய தீர்மானத்தை கொண்டு வர இருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாநில சுயாட்சி தொடர்பாக சட்டப்பேரவையில் நாளை தீர்மானத்தை முன்மொழிகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மாநில உரிமைகளை நிலைநாட்டக் கூடிய வகையில் விரைவில் புதிய அறிவிப்பை வெளியிடுவதாக, கடந்த மார்ச் 25 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

"இந்த மொழித் திணிப்பின் மூலமாக மாநிலங்களை, மாநில மொழிகளை, ஒரு இனத்தை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள். இதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மாநிலங்களை தங்களது கொத்தடிமைப் பகுதிகளாக நினைப்பதால்தான் இதுபோன்ற மொழித் திணிப்புகளும், நிதி அநீதிகளையும் செய்கிறார்கள். எனவே, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையைக் காக்கவும் - மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிகச்சரியான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ்மொழியையும் காக்க முடியும், தமிழினத்தையும் உயர்த்த முடியும் என்பதை உறுதிபடத் தெரிவித்து, அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்" என அறிவித்திருந்தார்.
அதன்படி, நாளை தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அநீதி இழைத்து வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வரும் சூழலில் தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ள இந்த தீர்மானம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications