இந்த மாதிரி வேலையை காட்டுனா கடும் நடவடிக்கை.. வார்னிங் கொடுத்த ஸ்டாலின்! அரண்டு போன மா.செக்கள்!
சென்னை: "திமுக உறுப்பினர் சேர்க்கையில் போலி உறுப்பினர் சேர்ப்பு கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மிகப்பெரிய அளவில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை முன்னெடுத்துள்ளது திமுக.

ஸ்டாலின் ஆலோசனை
'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை கடந்த ஜூலை 3 ஆம் தேதி தொடங்கி வைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின். மாநிலம் முழுவதும், கட்சியினர் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கவும், நம்முடைய திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர வீடு வீடாக போய் பரப்புரை மேற்கொள்ளவும், திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர்களை உறுப்பினர்களாக சேர்க்கவும், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை கடந்த 3ஆம் தேதி தொடங்கினோம்.
மக்களின் வரவேற்பு சூப்பர்
தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டு வர மக்களைத் தேடி வீடு வீடாகச் செல்கிறோம் என்பது மகிழ்ச்சி. செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளது என கேள்விப்படும் போது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் உழைக்கும் ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் என் தலை தாழ்ந்த வணக்கம், நன்றி.
மேலும், நமக்கு இன்னமும் 30 நாட்கள் தான் உள்ளது. எண்ணிக்கைக்கு நாம் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நம் கட்சியினர் கலந்துரையாடுவதை உறுதி செய்திட வேண்டும். ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள, இழைக்கவுள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்து சொல்வது தான் இந்த முன்னெடுப்பின் நோக்கம்.
2.5 கோடி பேரை உறுப்பினர்களாக்க வேண்டும்
அடுத்த 30 நாட்களில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து 2.5 கோடி பேரை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். நாம் உருவாக்கியிருக்கும் பூத் டிஜிட்டல் ஏஜெண்டுகள் மிகப்பெரிய சொத்து. அவர்களை எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கும், தேர்தலை கடந்தும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
"எனது கணவர் மாற்றுக்கட்சியில் கிளைச் செயலாளர். அவரைத் தவிர எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் தி.மு.கவில் இணைத்துக் கொள்கிறோம்" எனக் கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்தது, தமிழ்நாட்டின் உணர்வாகி, உடன்பிறப்புகள் பெருக வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை
மேலும் பேசிய ஸ்டாலின், "இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது. வாக்குச்சாவடிகளில் நாம் வழங்கிய நடைமுறையை சரியாக கடைபிடிக்கவில்லை எனில் அங்கெல்லாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவோம். உறுப்பினர் சேர்க்கையில் போலி உறுப்பினர் சேர்ப்பு போன்றவை கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications