அப்போ நடிகர்.. இப்போ முதல்வர்! விஜய் மாணவர்கள் சந்திப்பு எப்போ? மாணவர்களை குஷிப்படுத்தும் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழா இந்த ஆண்டும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதுவரை கட்சி தலைவராக மாணவர்களை சந்தித்து வந்த விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக அந்த மேடையில் கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில், அந்த நிகழ்ச்சி எப்போது நடைபெறும் என்பது குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்ட தலா 3 மாணவர்களை நேரில் சந்தித்து பாராட்டுவது இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. முதன்முறையாக கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகராக இருந்தபோதே விஜய் இந்த முயற்சியை தொடங்கினார்.
முதலமைச்சர் விஜய்
அப்போது தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சென்னைக்கு அழைத்து, நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கினார். அந்த நிகழ்ச்சி அரசியல் வட்டாரத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட நிலையில், 2024 ஆம் ஆண்டு கல்வி விருது விழா கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டது. சென்னை திருவான்மியூரில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு விஜய் நேரடியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களும் பண ஊக்கத்தொகையும் வழங்கினார்.
கல்வி விருது விழா
மாணவர்களுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. அதேபோல் 2025 ஆம் ஆண்டிலும் நான்கு கட்டங்களாக கல்வி விருது விழா நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் பேசிய உரைகள் பெரும் வரவேற்பை பெற்றன. குறிப்பாக சமூக பிரச்சினைகளை எதிர்கொண்டு படிப்பில் வெற்றி பெற்ற மாணவர்கள் மேடையில் கவுரவிக்கப்பட்டது கவனம் பெற்றது. மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் பெரிதும் பேசப்பட்டன.
தவெக கல்வி விருது
இந்த நிலையில் தற்போது 2026 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதால், இந்த ஆண்டின் கல்வி விருது விழா எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதன்படி, தவெக கல்வி விருது வழங்கும் விழாவை ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நடத்த கட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாணவர்கள் சந்திப்பு
இதற்கான இடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாணவர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக, இந்த முறை முதலமைச்சராக விஜய் பங்கேற்க உள்ளதால், முந்தைய ஆண்டுகளை விட பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விவரங்களை தவெக நிர்வாகிகள் சேகரித்து வருகிறார்கள்.
அரசு பள்ளி மாணவர்கள்
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிரமப்படாமல் இருக்க, ஒரே கட்டமாக மிகப்பெரிய விழாவாக நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் நிகழ்ச்சியில் சாதனை மாணவர்களுடன் அரசு பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் தனி கவுரவம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் முதல் நிகழ்ச்சி
முதலமைச்சராக பதவியேற்ற பிறகு மாணவர்களை நேரில் சந்திக்கும் விஜய்யின் முதல் பெரிய கல்வி நிகழ்ச்சி என்பதால், இந்த விழாவுக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில், கல்வி விருது விழா தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications