வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்!
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்யவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்தவும் முதல்வர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை' (Singappennae Special Task Force) என்ற புதிய பெண்கள் பாதுகாப்பு பிரிவை துவங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்த சூழலில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தலைமையிலான தமிழக அரசு 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை' துவக்கி வைத்து பேசிய விஜய், பெண்களின் பாதுகாப்பைக் குலைப்பவர்களுக்கு வெளிப்படையாக வார்னிங் கொடுத்துள்ளார்.

விஜயின் எமோஷனல் பேச்சு!
சென்னையில் நடைபெற்ற இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில் முதல்வர் விஜய் பேசுகையில், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கை உள்ளிட்ட அத்தனை பெண்களின் பாதுகாப்பும் மிக முக்கியம் என்று குறிப்பிட்டார். நம் சமூகத்தில் ஒரு தனிமனிதன் ஒழுக்கமாகவும், கட்டுப்பாடான பொறுப்புடனும் வாழ்ந்தாலே இது போன்ற பல அச்சுறுத்தல்களை நாம் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முடியும் என்று பேசினார்.
பெண்கள் கல்வி கற்கும் இடங்கள், வேலைக்குச் செல்லும் இடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் நேரங்கள் என தங்களின் அன்றாட வாழ்வில் எவ்வித பயமும் இல்லாமல், சுயமரியாதையுடன் வாழ்வதற்கான ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவதுதான் இந்த புதிய அதிரடிப் படையின் முதன்மை இலக்கு என்றும் விஜய் தெளிவுபடுத்தினார்.
'சாப்டா சொன்னது போதும்'.. அதிரடி வார்னிங்!
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்துப் பேசும்போது முதல்வர் விஜய் மிகவும் கனத்த குரலில், "இவ்வளவு நேரம் நான் இதையெல்லாம் மிகவும் சாப்டாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால், பெண்களைத் தொந்தரவு செய்துவிட்டு சட்டத்தின் பிடியிலிருந்து அப்படியே தப்பித்து ஓடிவிடலாம் என்று கணக்கு போடுபவர்களுக்கு நான் வெளிப்படை எச்சரிக்கையாகவே இதைச் சொல்கிறேன்.
பெண்கள் பாதுகாப்பைக் குலைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அதை என் அரசாங்கத்தால் எக்காரணம் கொண்டும் சகித்துக் கொள்ளவே முடியாது" என்று மிகக் கடுமையான வார்த்தைகளில் வார்னிங் விடுத்தார்.
அத்தகைய குற்றவாளிகளுக்குக் காவல் துறை மூலம் வழங்கப்படும் தண்டனைகளும், சட்ட நடவடிக்கைகளும் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ராக்கெட் வேகத்தில் சார்ஜ் ஷீட்
குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசிய முதல்வர், பெண்களுக்கு எதிராகத் தப்பு செய்பவர்களுக்கான குற்றப்பத்திரிகை (Charge Sheet) தாக்கல் செய்யும் நடைமுறைகள் அனைத்தும் காவல் துறையினரால் வேகமாகவும், துரிதமாகவும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
அதே வேளையில், இந்த அதிரடி வேகத்தில் எந்தவொரு நிரபராதியும் தவறுதலாகத் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதைத் தமிழ்நாட்டின் காவல் துறை அதிகாரிகள் தங்களின் மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
உண்மையாகத் தப்பு செய்தவர்களுக்கு நீதிமன்றத்தின் (Court) மூலமாக மிக கடுமையான தண்டனையைத் வேகமாக வாங்கித் தர வேண்டும் என்றும், அப்போதுதான் அந்தத் தண்டனையின் தீவிரத்தைப் பார்த்து, எதிர்காலத்தில் பெண்களுக்கு எதிராக ஒரு சிறிய தவறைக்கூடச் செய்ய நினைப்பவர்களின் மனதில் பயம் உருவாகும் என்றும் முதல்வர் விஜய் கடுமையான வார்த்தையில் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications