தமிழகத்துக்கு சற்று ஆறுதல் தரும் செய்தி.. வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பில்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 23 செமீ மழை பதிவாகியுள்ளது. தலையஞாயிறில் 21 செ.மீ., வலங்கைமானில் 19 செ.மீ., திருவாரூர் 17 செ.மீ, நீடாமங்கலம், குடவாசலில் 13 செ.மீ, மன்னார்குடி 11 செ.மீ, நன்னிலம் 10 செ.மீ, அரியலூரில்10 செ.மீ மழை பெய்துள்ளது. திருத்துறைப்பூண்டியில் 15 செ.மீ, நாகை 17 செ.மீ தரங்கம்பாடியில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் இயல்பு அளவான 33 சதவிகிதத்தை விட குறைவாக 30 சதவிகித மழை மட்டுமே பெய்துள்ளது. சென்னையில் 45 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பில்லை. இனிவரும் நாட்களில் மழையளவு குறையும் என்றார் புவியரசன்.