கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி..நகைக்காக காத்திருந்த மக்களுக்கு தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி
தோ்தல் நடத்தை விதிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் தள்ளுபடித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தோ்தல் நடத்தை விதிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நகைக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை உடனடியாக வழங்கிட வேண்டுமென தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் தற்போதைக்கு நகைக் கடன் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுக ஆட்சி அமைந்த உடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களை கண்டறிவதற்காக கடந்த ஒரு மாத காலம், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண்,முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து, தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யவும் நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய அறிவுரைகள் வழங்கி கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது.
அந்த மீட்டிங்.. தமிழிசை ஆக்சன்.. ஆளுநர் ரவி திடீர்ன்னு ஏன் இவரை சந்திக்கிறார்? என்னதான் நடக்குது?
நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு
2021ஆம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்கள், குடும்ப அட்டையின் படி இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் நகை கடன் தொகை முழுமையாக செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேற்பட்ட நகை கடன் பெற்ற குடும்பத்தினருக்கு தள்ளுபடி செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது. 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்றவர்கள், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்,குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள், ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள் , எந்த பொருளும் வேண்டாத குடும்பத்தினர், ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கு கூடுதலாக பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோருக்கு நகைக்கடன் தள்ளுப்படி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
35,37,693 பேருக்கு தள்ளுபடியில்லை
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்தவர்களில் 10,18,066 பேர் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என தகவல் வெளிவந்தது. அதேசமயம் 35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என தகவல் வெளியானது. அரசாணையில் கண்டுள்ள நிபந்தனைகளில் கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் 35,37,693 நகைக் கடன் தள்ளுபடி பெறாத நேர்வுகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நகைகள் எப்போது கிடைக்கும்
இதையடுத்து, கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகள் எப்போது திரும்ப வழங்கப்படும் என்று பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஊரக பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் சண்முகசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நகைக் கடன் தள்ளுபடியில் தகுதி வாய்ந்த மற்றும் தகுதி பெறாதவா்களுக்கான நிபந்தனைகள் மற்றும் அறிவுரைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். இந்த விதிமுறைகளைப் பின்பற்றியே தகுதி வாய்ந்த பயனாளிகளின் பட்டியலைத் தயார் செய்ய வேண்டும்.
தகுதியானவர்களுக்கு தள்ளுபடி
தகுதி பெறாத நபா்களை மிகவும் கவனமுடன் பரிசீலித்து நீக்கிய பிறகே பட்டியலைத் தயார் செய்ய வேண்டும்.எந்தவொரு தகுதி பெறாத கடன்தாரருக்கும் நகைக் கடன் தள்ளுபடி தவறுதலாக வழங்கப்பட்டு விடக் கூடாது. அவ்வாறு தவறுதலாக வழங்கப்படும் பட்சத்தில் அதற்கு சம்பந்தப்பட்ட சங்கங்களின் செயலாளா், வங்கி மேலாளா்கள் மற்றும் பட்டியலைத் தயார் செய்யும் குழுவே முழு பொறுப்பாவர். இதனை துணைப் பதிவாளர் மற்றும் மண்டல இணைப் பதிவாளர் ஆகியோர் முறையாக கண்காணிக்க வேண்டும். நகைக் கடன் தள்ளுபடி அரசாணையில் குறிப்பிடப்பட்ட தகுதி வாய்ந்த பயனாளிக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகள்
தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகளை தோ்வு செய்து, அவா்கள் அடமானம் வைத்த நகை மற்றும் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்க வேண்டும். இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று வருகிறது. எனவே, தோ்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வழங்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் அவற்றை கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும். நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும் வரை நகைக் கடன் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது.
கிராமங்களில் நகைக்கடன் தள்ளுபடி திட்டம்
தோ்தல் நடத்தை விதிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் தள்ளுபடித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். மேலும் பயனாளிகளுக்கான நகைகளையும், தள்ளுபடி சான்றிதழ்களையும் உடனடியாக வழங்கிட வேண்டும். பொது நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் வழங்கும் பட்சத்தில் அவா்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுபவராக இருக்கக் கூடாது. மேலும், தள்ளுபடி நகைகளுக்கான சான்றிதழ் மற்றும் நகைகளை திரும்ப வழங்கும் பணியில் தோ்தல் பணி அலுவலா்களை ஈடுபடுத்தக் கூடாது. தோ்தல் நடத்தை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி பொது நகைக் கடன் தள்ளுபடித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.