கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தமா... விவசாயிகள், மக்கள் பாதிப்பு!!
சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்டு வந்த நகைக்கடனை நிறுத்தி வைக்குமாறு கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த செயலுக்கு அந்த சமேளனம் கண்டனமும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் (சட்டம் மற்றும் பயிற்சி) ஒரு குறுஞ்செய்தியை அனைத்து மாவட்ட மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ளனர். அதில், தமிழகத்திலுள்ள மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 23 மத்திய கூட்டுறவு, 128 நகர கூட்டுறவு வங்கிகள், 4250 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் நகைக் கடன் வழங்குவதை நிறுத்தி வைக்க ஆணையிடப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் வாழ்வாதாரங்களையும் இழந்த நிலையில் நகைகளை வைத்து கடன்கள் பெற முடியாமல் மக்களும் , விவசாயிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போது மீண்டும் கடன்கள் வழங்கப்படும் என்பது குறித்த தகவல்களும் இல்லை. இதனால், வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் மீண்டும் எப்போது கடன் வழங்கப்படும் என்ற தகவலை அளிக்க முடியாமல் குழப்பத்தில் வங்கி அதிகாரிகள் உள்ளனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications