கலைஞர் பன்னாட்டு அரங்கம்.. 2 அனுமதியும் கிடைத்துவிட்டது.. கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்?
சென்னை: சென்னை அடுத்த முட்டுக்காட்டில் அமைய உள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கான கட்டுமான பணிகளை விரைவில் தொடங்கி, இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கும் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த கலைஞர் பன்னாட்டு அரங்கத்தில், தொழில் கண்காட்சிகள், வர்த்தக மாநாடு, உலக திரைப்பட விழா உள்ளிட்டவை நடக்கும் இடமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் கண்காட்சி அரங்கம், 10 ஆயிரம் பேர் கூடும் வகையில் கண்காட்சி கூடம், உணவு விடுதிகள், திறந்த வெளி அரங்கம், 10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதி, அதற்கேற்ப சாலை மற்றும் அடிப்படை வசதி செய்யப்படவுள்ளன. இந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் கோவளத்தை அடுத்த முட்டுக்காடு பகுதியில் அமையவிருந்தது.
ஈசிஆர் அருகே ரூ.525 கோடி மதிப்பில் 8 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்படும் என்று தெரிய வந்தது. இதற்காக தமிழக அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதியும், கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியையும் பெற வேண்டும். இதனால் பொதுப்பணித்துறை சார்பாக இரு ஆணையங்களிடமும் ஒப்புதல் கடிதம் கோரப்பட்டது.
அதில் சில நாட்களுக்கு முன் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி பெறப்பட்டது. இதனால் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்தால், தமிழக அரசு கட்டுமான பணிகளை தொடங்க ஆர்வம் காட்டியது. இந்த நிலையில் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையக் குழு தரப்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமையவுள்ள இடத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றால், அங்குள்ள நிலத்தடி நீரை உறிஞ்சக் கூடாது. கழிவுகளை கடலில் கலக்கவிடக் கூடாது, மழைநீர் சேகரிப்பு, மறுசுழற்சி திட்டங்கள் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கான கட்டுமானப் பணிகளை விரைவாக தொடங்கி, இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications