கிரேட்.. சென்னை, மும்பை, டெல்லியை பின்னுக்கு தள்ளிய கோவை.. கெத்துதான்.. இவ்வளவு பெரிய வளர்ச்சியா!
சென்னை: இந்தியாவின் மெட்ரோ நகரங்களை எல்லாம் கடந்த மாதம் கோவை மாவட்டம் பின்னுக்கு தள்ளி இருக்கிறது. கோவைனா கெத்து என்று பாடலில் வருவது போல.. மிகப்பெரிய வளர்ச்சியை கோவை பெற்றுள்ளதாக monster employment index தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்திற்கு பின் மீண்டும் தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களுக்கும் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.
முக்கியமாக கோவை, மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்கள் மீதும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்கள் மீதும் கவனம் செலுத்தப்படும், முதலீடு அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தப்பித்தது மெட்ரோ.. சிக்கிக் கொண்டது மதுரவாயல்.. உருவாக போகிறது உயர்மட்ட பாலம்.. முரசொலி
கோவை
இந்த நிலையில்தான் இந்தியாவின் அதிக ஊழியர்களை பணிக்கு எடுத்த பட்டியலில் மெட்ரோ நகரங்களை எல்லாம் கடந்த மாதம் கோவை மாவட்டம் பின்னுக்கு தள்ளி உள்ளது. கடந்த மே 2022ல் இந்தியாவிலேயே அதிக ஊழியர்களை பணிக்கு எடுத்தது கோவைதான் என்று Monster Employment Index (MEI) தெரிவித்துள்ளது. சென்னை, டெல்லி, பெங்களூர், மும்பை போன்ற நகரங்களை எல்லாம் கோவை.. கொஞ்சம் அப்படி போய் ஓரமா நில்லுங்க என்று நிற்க வைத்துள்ளது.
சென்னை
பணியாளர்களை பணிக்கு எடுப்பதன் வருடாந்திர வளர்ச்சி 27 சதவிகிதமாக கோவையில் (மே மாதத்தில்) இருந்துள்ளது. மும்பையில் இது 26 சதவிகிதமாக இருந்துள்ளது. டெல்லியில் இதில் 16 சதவிகிதமாக இருந்துள்ளது. சென்னையில் இது 15 சதவிகிதமாகவும், புனேவில் 13 சதவிகிதமாகவும், பெங்களூரில் 9 சதவிகிதமாகவும் இருந்துள்ளது. அதாவது கோவையில் புதிய பணியாளர்களை பணிக்கு எடுப்பது கடந்த மே மாதத்தில் 27 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மற்ற நகரங்களில் இதை கம்மியாகவே உயர்ந்துள்ளது.
அசுர வளர்ச்சி
கொரோனாவின் போது மோசமாக பாதிக்கப்பட்ட கோவை ஜவுளி, ஸ்டீல் துறை மீண்டும் எழுச்சி பெறுவதை இது உறுதிப்படுத்துகிறது. ஜவுளி, கட்டுமானம், ஸ்டீல் ஆகிய துறைகளில் அதிக பணியாளர்கள் எடுக்கப்பட்டுள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் மீண்டும் பணியாளர்கள் அலுவலகம் வர தொடங்கி உள்ளதால் அலுவலக உபகரண உற்பத்தி தொடர்பான பணிகள், ரியல் எஸ்டேட் ஆகியவையும் வளர்ச்சி கண்டு வருவதாக இதில் கூறப்பட்டுள்ளது. அலுவலக உபகரண உற்பத்தி தொடர்பான பணிகள் 101 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் கடந்த மே மாதம் 25 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. பைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட்ஸ் துறையில் புதிய பணியாளர்கள் சேர்க்கை 49 சதவிகிதம் உயர்ந்துள்ளது. எச். ஆர் துறையில் புதிய பணியாளர்கள் சேர்க்கை 36 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரு நகரங்களுக்கு இடையில் கோவையும் வேகமாக வளர்வது தமிழ்நாட்டின் பரந்துபட்ட வளர்ச்சியை உணர்த்துவதாக உள்ளது. இந்த லிஸ்டில் தமிழ்நாடு தவிர ஒரே மாநிலத்தில் இருந்து இரண்டு நகரங்கள் எந்த மாநிலத்திலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.