படாரென உடைந்த உராய்வு கம்பி! பாதியில் நின்ற கோவை இன்டர்சிட்டி.. சென்னை-பெங்களூர் ரயில் சேவை பாதிப்பு
சென்னை: சென்னையிலிருந்து கோவைக்கு செல்லும் இன்டர்சிட்டி ரயிலின் உயர் மின்னழுத்த உராய்வு கம்பி உடைந்ததால் ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையிலிருந்து பெங்களூரு மற்றும் மைசூர் செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னையிலிருந்து வழக்கமாக பிறபகல் 2.30 மணிக்கு தினமும் கோவைக்கு இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கடந்த 1997ம் ஆண்டிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. தொடக்க காலத்தில் பயண நேரம் 10-12 மணி நேரமாக இருந்த நிலையில், ரயிலின் வேகம் படிப்படியாக கூட்டப்பட்டு தற்போது இது 7.45 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
சொல்லப்போனால் சென்னையிலிருந்து திருப்பத்தூர் ஜோலார்பேட்டை வரை செல்லும் ரயில்களில் வேகமாக பயணிக்கக்கூடியது இந்த ரயில்தான். அதற்கேற்றால் போல குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் மட்டுமே இது நின்று செல்லும் என்பதால் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. இன்றும் இந்த ரயில் எப்போதும் போல சென்னை சென்டரலிலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டுள்ளது.

ரயில் பாதியில் நிறுத்தம்
புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் ரயில் என்ஜினில் ஏதோ பிரச்னை இருப்பதை ரயில் ஓட்டுநனர்கள் கவனித்துள்ளனர். ஆனால் என்ன பிரச்னை என்பது சரியாக தெரியவில்லை. இதனையடுத்து ரயிலை நிறுதி சோதனை செய்துள்ளனர். ரயிலின் சக்கரங்களிலும், என்ஜின் அடிபாகத்திலும் பிரச்னை இருப்பதாக தெரியவில்லை. எனவே மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றுள்ளது. ஆனால் அப்போது ரயிலின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில் அரக்கோணம் அருகே உள்ள மோசூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் லோகோ பைலட்கள் ரயிலின் மேற்பகுதியை சோதனை செய்துள்ளனர்.

உராய்வு கம்பி
அப்போதுதான் என்ஜினின் உயர் மின்னழுத்த உராய்வு கம்பி உடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் மூலம் ரயில் இயக்கப்படுவதற்கு இந்த மின்னழுத்த உராய்வு கம்பி மிகவும் அவசியமாகும். இந்த கம்பியின் உச்சியில் கருப்பு கலரில் தண்டவாளம் போல சிறியதாக இரண்டு பட்டைகள் இருக்கும். இதுதான் மேலே இருக்கும் வயரிலிருந்து மின்சாரத்தை கடத்தும். இதில் கருப்பாக இருப்பதுதான் கிராஃபைட். ரயிலுக்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படும் என்பதால் அதற்கு தேவையான மின்சாரத்தை வயரிலிருந்து கடத்த இந்த கிராஃபைட் பயன்படுகிறது.

சீரமைப்பு பணி
ஏனெனில் இது இரும்பை விட அதிக வெப்பத்தை தாங்கக்கூடியது. மட்டுமல்லாது மின்சார கடத்தியும் கூட. இந்நிலையில் இந்த கிராஃபைட் தாங்கிய கம்பிதான் கோவை இன்டர்சிட்டி ரயிலில் உடைந்திருக்கிறது. இதனால் ரயில் நகர முடியாமல் பாதியிலேயே நின்றிருக்கிறது. இதன் காரணமாக இந்த வழியாக பெங்களூரு, மைசூரு மற்றும் திருவனந்தபுரம் செல்லும் ரயில்களும் ஆங்காங்கே பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உடைந்த உயர் மின்னழுத்த உராய்வு கம்பியை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பயணிகளுக்கு சிரமம்
இதனை சரி செய்வதற்கு குறைந்தப்பட்சம் 2 மணி நேரமாவது எடுக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த வழியாக பயணிக்கும் பயணிகள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பொதுவாக இந்த உராய்வு கம்பிகள் ரயில் கிளம்புவதற்கு முன்னர் பரிசோதிப்பது வழக்கமாகும். ஆனால் இந்த முறை இது பரிசோதிக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வியெழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications