கைவிரிக்கும் ஜெர்மன் வங்கி, மவுனம் காக்கும் மத்திய அரசு.. கிடப்பில் போடப்படும் கோவை, மதுரை மெட்ரோ?
சென்னை: கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் இப்போது மிக பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
நமது நாட்டில் பல்வேறு ஊர்களிலும் டிராபிக் தான் இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. முன்பு சென்னை, பெங்களூர் என ஓரிரு நகரங்களில் மட்டுமே டிராபிக் பிரச்சினையாக இருந்த நிலையில், இப்போது பல ஊர்களிலும் டிராபிக் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது.

சாலைகள் விரிவாக்கம், மேம்பாலங்கள் என விரிவாக்க பணிகளை மேற்கொண்டாலும் கூட பொது போக்குவரத்தை மேம்படுத்தினால் மட்டுமே டிராபிக் பிரச்சினை சரியாகும். இதற்காகத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மெட்ரோ: குறிப்பாக நகரங்களில் இருக்கும் டிராபிக் நெரிசலைக் குறைப்பதில் மெட்ரோ முக்கிய தீர்வாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இப்போது சென்னையில் மட்டும் மெட்ரோ இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே மெட்ரோவின் வெற்றியாக இருக்கிறது. இப்போது சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ இயங்கி வருகிறது. மேலும், மூன்று ரூட்களில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க இரண்டாம் கட்ட நகரங்களிலும் மெட்ரோ சேவையைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருக்கிறது. கடந்த 2011ஆம் ஆண்டிலேயே மெட்ரோவை கொண்டு வர தகுதியான 19 நகரங்களை மத்திய அரசு பட்டியலிட்டது. அதில் கோவையும் இடம்பெற்றிருந்தது. இருப்பினும், அப்போது இருந்த அதிமுக அரசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் கோவை மெட்ரோ தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கோவை மெட்ரோ: அதேநாளில் கொச்சி மெட்ரோ அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கே பணிகள் படுவேகமாக நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே மெட்ரோ ரயில் அங்கே ஓட தொடங்கியது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை 10 ஆண்டுகள் கழித்து 2021இல் தான் கோவை மெட்ரோ சாத்தியக்கூறு அறிக்கையே முடிக்கப்பட்டது. கடந்த ஜூலை 15ஆம் தேதி கோவை மெட்ரோவுக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ குறித்த அறிவிப்புகள் கடந்த பட்ஜெட் உரையிலும் இடம்பெற்றிருந்தது. கோவை பொறுத்தவரை அவினாசி ரோடு முதல் சத்தி ரோடு வரை 39 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் அமையும் எனக் கூறப்பட்டது. அதேபோல மதுரையைப் பொறுத்தவரை சுமார் 35 கிமீ தொலைவில் மெட்ரோ அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வரும் நிலையில், விரைவில் அதுவும் முடிக்கப்படும் எனத் தெரிகிறது.
நிதியுதவியில் சிக்கல்: ஜெர்மனி நாட்டின் Kfw வங்கியின் நிதி உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டது. இதற்கான டெண்டர் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. பன்னாட்டு வங்கியின் நிதியுதவி கிடைத்தவுடன் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று இந்த மெட்ரோ திட்டங்கள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு ஜெர்மன் வங்கி நிதியுதவி வழங்க மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சிக்கலால் வேறு பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியும் கிடைப்பதும் சிரமமாகவே இருக்கிறது. இதனால் மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்களைத் தமிழ்நாடு அரசு கிடப்பில் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோவை மெட்ரோ திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், அதன் பிறகு எந்தவொரு கூட்டமும் நடத்தப்படவில்லை.
கிடப்பில் மெட்ரோ திட்டங்கள்: சென்னையின் இரண்டாம்கட்ட மெட்ரோ திட்டத்திற்கே மத்திய அரசு நிதி பெறுவதில் சிக்கல் இருக்கிறது. இந்த நேரத்தில் பன்னாட்டு வங்கியின் நிதியுதவியும் கிடைக்காத நிலையில், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் கிடப்பில் போடப்படும் என்றே இது குறித்து விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications