மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்! ஆட்டம் போட்ட கல்லூரி மாணவிகள்! ஆசிரியரை அழைத்து எச்சரித்த மீனவர்கள்
மாமல்லபுரம்: சென்னை கிழக்கு கடற்கரையில் உள்ள மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துக்கிடையே கடலுக்குள் குளித்த கல்லூரி மாணவ, மாணவிகளின் ஆசிரியரை அழைத்து மீனவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாணவிகள் அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையிலிருந்து 290 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதனால் நேற்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.

இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. சென்னை கொரட்டூர் முதல் அம்பத்தூர் ஓடி பேருந்து நிலையம் வரை சாலையில் இரு புறங்களிலும் சுமார் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியிருந்தது. கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்தது.
இதே போன்று அம்பத்தூர் பட்டரைவாக்கம் சாலை கருக்கு, கள்ளிக்குப்பம், மாதனாங்குப்பம், டீச்சர்ஸ் காலனி, நகர், பட்டரைவாக்கம் பால் பண்ணை சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை சுற்றியுள்ள தொழிற்சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை காரணமாக வெள்ள நீர் புகுந்தது.
இது போல் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கூட வெளியே வர முடியாத நிலையில் இருந்தனர். வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருக்கிறது.
அந்த வகையில் கன்னியாகுமரியில் உள்ள கடல் சீற்றத்துடன் இருந்தது. இதனால் படகுகள் சேதமடைந்தன. அது போல் மாமல்லபுரத்தில் உள்ள கடலும் சீற்றத்துடனே காணப்பட்டது. இந்த நிலையில் இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் மாமல்லபுரத்திற்கு ஆசிரியருடன் கல்லூரி மாணவிகள் சுற்றுலா வந்தனர்.
கடல் சீற்றத்துக்கு மத்தியிலும் கடலிலும் குளித்து அவர்கள் ஆட்டம் போட்டனர். ஆபத்தை அறியாமல் அவர்கள் கடற்கரையில் குளித்து செல்பி எடுத்ததை பார்த்த மீனவர்கள் அவர்களின் ஆசிரியரை அழைத்து எச்சரித்தனர். இதையடுத்து அந்த மாணவிகள் கடற்கரையை விட்டு வெளியேறினர்.












Click it and Unblock the Notifications