நில மோசடி புகார்.. விஷ்ணு விஷால் அப்பா மீது போலீஸ் வழக்கு.. சூரி நேரில் ஆஜராக சம்மன்!
நிலமோசடி வழக்கு தொடர்பாக விசாரிக்க நடிகர் சூரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
சென்னை: "சூரி சொன்ன பொய் அதிர்ச்சியாக இருக்கிறது.. வருத்தமாகவும் இருக்கிறது.. உண்மையை சொல்ல போனால் சூரிதான் அட்வான்ஸ் பணத்தை தர வேண்டும்" என்று நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டரில் விளக்கம் தந்திருந்தார். இந்நிலையில், நிலம் வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக புகார் அளித்த நடிகர் சூரிக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
"வீரதீர சூரன்" படத்தில் நடித்த நடிகர் சூரிக்கு, ரூ.40 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன்... இந்த நிலையில், தயாரிப்பாளர் தர வேண்டிய சம்பள பாக்கியைத் தர மறுத்த நிலையில், நிலம் வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் பணம் பெற்று ரூ. 2.70 கோடியை மோசடி செய்தாக புகாரளித்திருந்தார் நடிகர் சூரி.
இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வந்தது. கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, 'வீரதீர சூரன்' படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா ஆகிய 2 பேர் மீதும் அடையாறு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, சூரியின் இந்த புகார் உண்மையில்லை என்று நடிகர் விஷ்ணு விஷால் முன்னதாக டிவிட்டரில் விளக்கம் அளித்திருந்தார். அதில், "உண்மையில் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்க்கு சூரி தான், அட்வான்ஸ் பணத்தை திரும்பத் தர வேண்டும்.
"கவரிமான் பரம்பரை" படத்துக்காக 2017-ம் ஆண்டு நடிகர் சூரிக்கு அட்வான்ஸ் பணம் தரப்பட்டது.. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது... என் மீதும், என் அப்பா மீதும் வைக்கப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது.
ஆனால் சட்டம், நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது.. சட்டம் அனுமதிக்கும் பாதையில் நாங்கள் செல்வோம். எல்லாம் தெளிவான பின் சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்" என்று கூறியிருந்தார். இந்த விளக்கத்தையடுத்து, நடிகர் சூரிக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில் வருகிற 29-ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.