புதுஸ்ஸா இருக்கே.. ஆளில்லாமல் தொகுதியை ரிட்டன் தராங்க.. சின்னம் வாங்கிட்டு போட்டி இல்லைனு சொல்றாக!
சென்னை: தமிழகம், புதுவை சட்டசபை தேர்தல்கள் களம் எவ்வளவு அனல் பறக்கிறதோ அதே அளவுக்கு சப்தமில்லாதமல் காமெடி சங்கதிகளும் இடைவிடாமல் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்குவேன் என்றார்; பின்னர் ஜகா வாங்கினார். அதையடுத்து மீண்டும் அரசியல் கட்சி தேதியை அறிவிக்கிறேன் என்றார். அர்ஜூனமூர்த்தி, தமிழருவி மணியனுக்கு பதவி கொடுத்து அறிவிப்பு வெளியிட்டார்.
திடுதிப்பென நான் அரசியலுக்கே வரப் போவதில்லை என ஒரு அறிக்கை வெளியிட்டார். இதனால் பாஜகவில் இருந்து விலகி ரஜினிகாந்த் கட்சிக்கு வந்த அர்ஜூனமூர்த்தி அதிர்ந்து போனார்; விரக்தி அடைந்த தமிழருவி மணியன் நான் அரசியலுக்கு முழுக்கு போடுகிறேன் என 2-வது முறையாக அறிவித்தார்.

பந்தா வரவேற்பு
இதேபோலதான் சசிகலாவும். சென்னைக்கு பக்கத்துல இருக்கிற பெங்களூருவில் இருந்து வருவதற்கு 6 மணிநேரம்தான். ஆனால் விடிய விடிய என 23 மணிநேரம் படோபடமான வரவேற்புடன் பயணித்து ஏதோ தமிழக தேர்தல் களத்தையே தலைகீழாக மாற்றப் போகும் சபதத்துடன் பயணம் செய்தார். இடையே செய்தியாளர் சந்திப்பில், யாருக்கும் அடிபணியமாட்டோம்; தீவிர அரசியலில் ஈடுபடுவே என சவடாலும் விட்டார்.

அரசியலில் இருந்து ஒதுங்கல்
சசிகலாவும் சென்னை வந்தார்.. அவரு வருவாரு.. இவரு வருவார்.. அந்த அமைச்சர் போவாரு.. இத்தனை எம்.எல்.ஏக்கள் போவாங்க.. என கிளப்பிவிடப்பட்ட அத்தனை பீடிகைகளும் நமத்துப் போயின. இதன் உச்சகட்டமாக ஒரு விசித்திரமான அறிவிப்பாக, திமுகவை வீழ்த்த வேண்டும்; இப்போதைக்கு அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் என ஒரு போடு போட்டார் சசிகலா. தினகரன் உள்ளிட்ட பலரும் இந்த அறிவிப்பில் வெலவெலத்தனர்.

பிரேமலதா விஜயகாந்த்
இதற்கு பிறகு கூட்டணிகள், தொகுதி பங்கீடு களேபரங்கள்.. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் அவரது மகன் விஜயபிரபாகரனும்தான். அதிமுக கூட்டணியில் 41 இடங்கள் வேண்டும் என்றனர். நாங்க இடம்பெறும் கட்சிதான் ஆட்சி அமைக்கும்; லோக்சபா தேர்தலில் எங்களுடன் பாஜக கூட்டணி அமைத்ததால்தான் பாஜக மத்தியில் ஆட்சியே அமைத்தது என அடித்துவிட்டார் பிரேமலதா. அங்கிட்டு பாஜகவோ 60 தொகுதிகளில் ஜெயித்துவிடுவோம்; 60 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்போம் என கிளப்பிவிட்டார்.

கூட்டணிக்கு குட்பை
அத்துடன் இதுவரை இல்லாத வகையில் அய்யா கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழையுங்க என கெஞ்சிப் பார்த்தார் பிரேமலதா. ம்ஹூம் அம்மஞ்சல்லிக்கும் தேறலை இந்த கெஞ்சல்.. அங்கிட்டு பாஜகவின் உதார்களுக்கும் அதிமுக செவிசாய்க்கலை. கடைசியில் அதிமுக கொடுத்த 20 தொகுதிகளை வாங்கிக் கொண்டு அதில் 3 தொகுதி வேட்பாளர்களை தேடி கண்டுபிடிக்க முடியாமல் கண்ணாமுழி பிதுங்கிப் போனது பாஜக. தேமுதிகவோ 13 தொகுதிகளா கொடுக்கிறீங்கன்னு கேட்டு கூட்டணியை விட்டு வெளியேறியது.

கமல், சரத் கூத்து
அடுத்த காமெடிதான் உச்சகட்டம். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை பற்றி இப்படித்தான் மீம்ஸ்கள் வலம் வந்தன. கமல்ஹாசனுடன் ஏன் யாரும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு போகவில்லை தெரியுமா? அப்படி பேச்சுவார்த்தைக்கு போறவங்க தலையில எல்லா தொகுதியையும் கட்டிவிடுறாரு.. அத்தனை தொகுதிக்கும் போட்டியிட நம்ம கட்சியில் யாரு இருக்கிறாங்க? என்பதுதான் குத்துமதிப்பான ஒரு மீம்ஸ். ஆனால் இந்த மீம்ஸ் கருத்தும் பலித்ததுதான் செம காமெடி.

3 தொகுதி வேண்டாமே
மநீம கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 சீட் அள்ளி கொடுத்தார் கமல்ஹாசன். இந்த 40 சீட்டில் 37 சீட்டில் போட்டியிடுவதாகவும் 3 தொகுதிகளை திருப்பித் தருவதாகவும் சொன்னார் சரத்குமார். அதிலும் சரத்குமாரும் அவரது மனைவி அதாவது டிவி சீரியல்களுக்கு குட்பை சொல்லிவிட்டு அரசியலுக்கு வந்த நடிகை ராதிகாவும் தேர்தலில் போட்டியிடலையாம். ஏன் அந்த 3-ல் 2 தொகுதிகளில் போட்டியிடலாமே? எனில் அந்த கேள்விக்கு அங்கிட்டு இருந்து பதில் வரலை.

எல்லாத்துக்கும் சீட்
இதேதான் அமமுக நிலைமையும். யார் வந்தாலும் சீட் கன்பார்ம்.. ஓடி வா.. ஓடி வா என அந்த சேனை இந்த இயக்கம் என அனைவருக்கும் வாரி வழங்கினர் தொகுதிகளை. இங்கே அடைக்கலமான தேமுதிகவுக்கும் 60 தொகுதிகள் கொடுக்கப்பட்டன. இப்போதுவரை தொகுதிகளை மாற்றி மாற்றி கூத்தடித்துக் கொன்டிருக்கின்றனர் இந்த கூட்டணியினர். இதில் அதி உச்சகூத்தை நிகழ்த்தியவர்கள் 2 பேர். ஒருவர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி; இன்னொரு அர்ஜூன மூர்த்தி.

இது நாராயணசாமி ஸ்டைல்
புதுச்சேரியில் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடாமலேயே முதல்வராகி பின்னர் வேறுவழியில்லாமல் போட்டியிட்டவர் நாராயணசாமி. இப்போதைய சட்டசபை தேர்தலில் கணிசமான தொகுதிகளை திமுக கூட்டணியில் பெற்ற போதும் போட்டியிடப் போவதில்லை என உறுதியாக இருக்கிறார் நாராயணசாமி.

காமெடியன் அர்ஜூனமூர்த்தி
இன்னொருவர்தான் மக்களை கேடுகெட்ட முட்டாள் என நினைத்துக் கொண்டு கூத்தடிக்கும் மாஜி பாஜக மற்றும் ரஜினி கட்சி பிரமுகரான அர்ஜூன மூர்த்தி. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை எனில் மூட்டை முடிச்சு கட்டிக் கொண்டு பாஜகவுக்கு திரும்பி இருக்கலாம். அதைவிட்டு தனியே கட்சி தொடங்குவதாக அறிவித்தார். சரி இது பத்தோடு பதினொன்று... நோட்டோவுடன் போட்டிக்கு அலையும் கட்சி என்று ஒதுங்கினால்.. அடுத்த கூத்தாக தேர்தலில் போட்டியிட ரோபோ சின்னத்தையும் வாங்கினார். ஆக ரோபோ சின்னத்தில் அர்ஜூன மூர்த்தி கட்சி போட்டியிடும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்க அவர்களை அடிமுட்டாளாக்கும் வகையில் ரஜினிகாந்த் மாதிரியே தேர்தலில் போட்டியிடலை..நேரம் இல்லை என தலைதெறிக்க தப்பி ஓடி இருக்கிறார்.

குடோனிலேயே இருக்கலாமே
அர்ஜூனமூர்த்தி போன்ற வெத்துவேட்டுகள் எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்? இந்த அற்பங்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தாக வேண்டும் என வெற்றிலை பாக்கு வைத்தா அழைத்தார்கள்? இவர்களைப் போன்றவர்கள் பருத்தி மூட்டை குடோனிலேயே கமுக்கமாக இருந்துவிடுவதுதான் நல்லது! ஜனநாயகத் திருவிழா காலத்தில் இத்தனை கோமாளித்தனங்களும் இல்லாமல் இருந்தாலும் சுவாரசியமும் இல்லைதானே!












Click it and Unblock the Notifications