அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு!
சென்னை: ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான நேற்று முதல், வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், ஹோட்டல் மற்றும் உணவகத் துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சிறு அளவில் இயங்கி வந்த ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகள் இந்த விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை சுமார் 200 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன் காரணமாக, சமையல் எரிவாயு செலவு திடீரென அதிகரித்ததால் ஹோட்டல் உரிமையாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் வணிக சிலிண்டரின் விலை முன்பு இருந்ததை விட கணிசமாக உயர்ந்து தற்போது 2,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கேஸ் சிலிண்டர்
இதேபோல் நாட்டின் பிற பெரிய நகரங்களிலும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. வட இந்திய நகரங்களில் கூட விலை உயர்வு காணப்படுவதால், இந்த அறிவிப்பு நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட மாற்றங்களே இந்த திடீர் விலை உயர்வுக்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
விலை உயர்வு
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்தால், அதன் தாக்கம் உடனடியாக சமையல் எரிவாயு விலையிலும் பிரதிபலிக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இந்நிலையில், வணிக சிலிண்டர் விலை உயர்ந்ததால், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உணவகங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தினசரி வருமானத்தை மட்டுமே நம்பி இயங்கும் டீக்கடைகள், சிறு உணவகங்கள் மற்றும் சாலையோர உணவகங்கள் அதிக சிரமத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
டீக்கடைகள் மூடல்
சில இடங்களில் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தற்காலிகமாக கடைகளை மூடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சில இடங்களில் கள்ளச் சந்தை உருவாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் அதிகாரப்பூர்வ விலையை விட பல மடங்கு அதிகமாக விற்கப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டல்கள் பாதிப்பு
இந்த நிலை தொடர்ந்தால், உணவகங்களின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சமும் நிலவி வருகிறது. இந்த விலை உயர்வின் நேரடி தாக்கம் பொதுமக்களையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. காரணம், ஹோட்டல் மற்றும் உணவகங்களில் உணவு தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளதால், உணவுப் பொருட்களின் விலையும் உயரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே சில இடங்களில் உணவு விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீட்டு சிலிண்டர்
அதே நேரத்தில், வீட்டு பயன்பாட்டுக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் தற்போது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் இல்லத்தரசிகள் மத்தியில் சற்றே நிம்மதி அடைதுள்ளனர். ஆனால், வணிக சிலிண்டர் விலைவாசி உயர்வால் அன்றாட பட்ஜெட் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் போர் இன்னும் நீடித்தால், எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications