தொடரும் பாதாள சாக்கடை மரணங்கள்.. சரமாரி கேள்வி கேட்ட சென்னை உயர் நீதிமன்றம்- இனியாவது நிலைமை மாறுமா?
சென்னை: பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்குவது குற்றம் என சில ஆண்டுகளுக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இது குறித்து முக்கிய அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் இதுபோன்று பாதாள சாக்கடைகளில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபடுவோர்கள் உயிரிழக்கும் அவலம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இதனை தவிர்க்க பல்வேறு முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டாலும் இதனை முற்றிலுமாக ஒழிக்கப்பட முடியவில்லை. இந்நிலையில் நீதிமன்றத்தின் அறிவிப்பு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நீண்ட நாட்களெல்லாம் கிடையாது. சுமார் ஒரு மாத்திற்கு முன்னர்தான். ஜூன்-ஜூலை மாதங்களுக்கிடையில் சென்னையில் அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இவர்கள் அனைவரும் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். முதலில் பெருங்குடியின் காமராஜர் நகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 20 அடி ஆழமுள்ள கழிவுநீர்த் தொட்டியில் தூய்மைப் பணிக்காக இருவர் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் அவர்களை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.
இதனைத் தொடர்ந்து ஆவடி, மடிப்பாக்கம் என தொடர்ந்து இரண்டு நாட்களில் 5 பேரின் உடல்கள் இதேபோல மலக்குழி தொட்டிக்குள் இருந்து மீட்டெடுக்கப்பட்டன. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. முதலமைச்சர் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.15 லட்சத்தை நிவாரணமாக அறிவித்தார். ஆனால் அதன் பின்னரும் தமிழ்நாடு முழுவதும் இந்த அவலங்கள் நின்றபாடில்லை. ராணிப்பேட்டை, மதுரை என ஆங்காங்கே அவ்வப்போது மரணங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருந்தன.
இந்நிலையில் இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறையை முழுவதுமாக ஒழிக்கக் கோரியும், ஊழியர்களை இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரியும், சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உயர்நீதிமன்றம் எதிரில் பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறங்கச் செய்து சுத்தம் செய்யப்படுவதாக கடந்த வாரம் தலைமை நீதிபதி அமர்வில் மனுதாரர் சங்கம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், கடந்த ஜூலை 26ம் தேதி மாதவரத்தில் பாதளச் சாக்கடையில் சுத்தம் செய்ய இறங்கிய 2 நபர்கள் இறந்துள்ளதாக தெரிவித்தார். மனுதாரர் தாக்கல் செய்த இந்த அறிக்கை குறித்து பதிலளிக்க அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, ஒரு வாரத்திற்குள் மனுவிற்கு பதிலளிக்க சென்னை மெட்ரோ குடிநீர் வழங்கல் துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும், பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்ய உயர்நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது என நீதிபதிகள் தெரிவித்தனர். அதேபோல, பாதாள சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்ய மாநகராட்சி மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்கள் ஊழியர்களை நியமிக்கக்கூடாது எனவும் அவ்வாறு நியமித்தால் அதற்கு மாநகராட்சி ஆணையர்களே பொறுப்பு என தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி தூய்மை பணியை மேற்கொள்ளும்போது ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications