வீட்டுமனை பத்திரப்பதிவு செய்வோர்.. விஏஓ முதல் சர்வேயர் வரை.. பட்டாவில் கவனிக்க வேண்டிய மேஜர் தவறுகள்
சென்னை: வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்வோர், பத்திரப்பதிவு செய்யும் போது எந்த அளவிற்கு கவனமாக இருக்கிறார்களோ, அதைவிட அதிகமாகவே பட்டா வாங்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும். சிறு தவறு கூட உங்களை பல நாட்கள் நீதிமன்றத்திற்கு அலைய வைத்துவிடும். பட்டாவில் நில அளவை உள்பட பல்வேறு விஷயங்களில் நடந்த தவறுகள் தான் இன்று பலரை அலைக்கழிய வைத்துள்ளது.
விளை நிலங்களை வீட்டு மனைகளாக 'லே-அவுட்' போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்த வித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது என்பது சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவாகும். எனவே டிடிசிபி அப்ரூவ்டு இல்லாத வீட்டு மனைகளை வாங்கிட வேண்டாம். அதேபோல் கூட்டுப்பட்டா உள்ள நிலத்தை வாங்குவதாக இருந்தால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து வாங்குங்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான பிரச்சனைகளில் நன்கு நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர்களிடம் கேட்டு முடிவு செய்து நிலத்தை வாங்குங்கள்.

ஏனெனில் ஏதேனும் வில்லங்கம் இருந்தால் பட்டா வாங்குவதில் சிக்கல் ஏற்படும். இன்றைய சூழலில் ஒரு இடத்தை வாங்க போகிறீர்கள். அந்த இடத்திற்கு அட்வான்ஸ் தரப்போகிறீர்கள் என்றால், அதற்கு முன்பு அந்த இடம் அவருடைய இடம் தானா..அந்த இடம் குறித்து விஏஓ ஆபிஸுக்கு சென்று எல்லா தகவலையும் பெறுங்கள். நிலம் எந்த வகையான நிலம் என்பதை பாருங்கள். கள்ளர் ஜாதி நிலம், வன்னார் ஜாதி நிலம், ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட நிலம், பஞ்சமி நிலம், அரசு இலவசமாக வழங்கிய நிலம் என பல்வேறு வகையான நில வகைகள் உள்ளன. சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமித்தும் பத்திரப்பதிவு செய்திருப்பார்கள்.
அந்த காலக்கட்டத்தில் எல்லாமே நடந்தது. ஆனால் பட்டா மட்டும் பலருக்கும் அரசு தரவே இல்லை.. பத்திரப்பதிவு செய்யப்பட்ட போதிலும், பல இடங்களுக்கு அரசு இன்று வரை பட்டா தருவது இல்லை.. எனவே நிலத்தை வாங்கினால் பட்டா கிடைக்குமா, வீடு கட்ட வங்கி கடன் கிடைக்குமா, நிலத்தில் எதுவும் வில்லங்கம் உள்ளதா என்பதை உறுதி செய்துவிட்டு வாங்குகள். யாரோ அந்த காலத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பத்திரப்பதிவு செய்திருப்பார்கள்.
ஆனால் பட்டா வாங்கியிருக்க மாட்டார்கள். அந்த இடத்தை வாங்கினால் அவருக்கு பதில் அந்த சிக்கலை நீங்கள் சந்திக்க வேண்டியது வரலாம். இன்றைய சூழலில் அரசு நிலங்கள், நீர் நிலை நிலங்கள், இந்து அறநிலையத்துறை நிலங்கள் என பல்வேறு வகை நிலங்களின் மதிப்பு பூஜியம் என்று வழிகாட்டு மதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நிலம் அல்லது வீடு அல்லது இடம் வாங்க அட்வான்ஸ் தரப்போகிறீர்கள் என்றால்.. இவற்றை எல்லாம் நிச்சயம் உறுதி செய்ய வேண்டியது அவசியம் ஆகும். பணத்தை கொடுத்துவிட்டு அப்புறம் கஷ்டப்பட வேண்டாம்.
இதேபோல் எல்லாமே சரி.. நிலம் அல்லது வீட்டுமனையை பத்திரப்பதிவு செய்து விட்டீர்கள் என்றால், பத்திரப்பதிவு செய்யப்பட்ட நிலத்திற்கு கையோடு பட்டா வாங்கிவிடுங்கள். அந்த பட்டாவில் உள்ள அளவு என்பது பத்திரப்பதிவு செய்த அளவுடன் சரியாக இருக்க வேண்டும். தவறாக கல்லை மாற்றி அளந்து சர்வேயர் செய்யும் சில தவறுகள் உங்களை மட்டுமல்ல.. உங்கள் பக்கத்து இடத்தில் உள்ளவரையும் கலங்க வைத்துவிடும்.
அதாவது நிலத்தை வாங்குவோர்,கண்டிப்பாக செக்கு பந்தி என்ற நிலத்தின் எல்லை பவுண்டர்களை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும். அதைவிட்டு விட்டு பழைய பத்திரத்தில் உள்ளதையே புதிய பத்திரத்தில் குறிப்பிட்டு பத்திரப்பதிவு செய்து நிலத்தை அல்லது வீட்டு மனையை வாங்கக்கூடாது. அப்படி செய்தால் எத்தனை வருடம் அலைந்தாலும் தீர்வு கிடைக்காது.
சரியாக கிரயம் பெறும் நிலத்தின் பேரில் தான் கிராம நிர்வாக அலுவலரால் சிட்டா, ' ஏ' ரிஜிஸ்டர் நகல், அடங்கல் நகல் (நிலத்தைப் பற்றிய எல்லா விவரங்களும் இதில் அடங்கி இருப்பதால் இது அடங்கல் என்று பெயர்) மற்றும் நில வரை படம் (Field Measurement Book, FMB ) ஆகியவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி சரியாக இருந்தால், அந்த நகல்களை விஏஓ ஆபிஸில் போய் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பிற்கு வீட்டு மனை வாங்குவோர் , கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டாவிற்கு பத்திரத்தின்படி விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பித்து பட்டா வாங்கினால் தான், நிலத்தில் வீடு கட்ட பில்டிங் பிளான் அப்ரூவல் கிடைக்கும். தனிப்பட்டா இல்லாவிட்டால் நிலத்தில் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
சர்வேயர் உங்கள் அளத்தை தவறாக அளக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.. சர்வேயர் நீங்கள் வாங்கிய நிலத்திற்கு வந்து 30 நாள்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்து தனிப்பட்டா வழங்க வேண்டும்.அதேபோல் சர்வேயர் உங்கள் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தவறாக நிலத்தை அளந்து கொண்டிருந்தால் உங்களுக்கு பட்டா கிடைக்காது. அப்படி தவறு நடந்திருந்தால். அதனை இருவரும் சென்று மேல்முறையீடு செய்து, புதிதாக பட்டா தருமாறு வேண்டுகோள் வைக்க வேண்டும். அப்படி விண்ணப்பித்து சரி செய்து கொண்டால் மட்டுமே பட்டாவில் வில்லங்கம் பின்னாளில் வராது.












Click it and Unblock the Notifications