இ.கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சை.. நுரையீரலில் பாதிப்பு என தகவல்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. கடந்த 19 நாளாக தொடர்ந்து தினசரி பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 56,211 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினசரி பாதிப்பில் மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கேரளா, தமிழ்நாடு, சட்டீஸ்கர் ஆகிய 8 மாநிலங்கள் 84.5 சதவீதம் அளவுக்கு அதிகமாக உள்ளன.
டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள்
இந்த அலையில் பல பிரபலங்கள் சிக்கியுள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள், சச்சின் டெண்டுல்கர் போன்ற விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நல்லகண்ணு
இந்நிலையில்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லகண்ணுவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுரையீரல்
நல்லகண்ணுவுக்கு நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு 95 வயது என்பதால், மிகவும் கவனத்தோடு மருத்துவர்கள் அவர் உடல்நிலையை பார்த்து பராமரித்து வருகின்றனர்.
முதியவர்
இதனிடையே, நல்லகண்ணு விரைவில் நலம் பெற்று அவர் வீடு திரும்ப வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அவரது நலம் விரும்பிகளும், கருத்து தெரிவித்து வருகிறார்கள். பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய காலகட்டம் இது என்கிறார்கள் மருத்துவர்கள்.