ஒப்புதல் கொடுத்த ஆளுநர்.. ஒன்றுபட்டு சாதித்த எடப்பாடி- ஸ்டாலின்.. சபாஷ்! இதுதான் எங்களுக்கு தேவை!
சென்னை: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கு நீண்ட அழுத்தத்திற்கு பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் கொடுத்துள்ளார். இதற்கு உண்மையிலேயே மிகவும் பாராட்டுக்குரியவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலினும், இருவரும் அரசியலை தாண்டி ஒற்றுமையாக சாதித்துள்ளனர். இவர்களை தாண்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையும் மிக முக்கிய காரணமாகும் எனவே நீதிமன்றத்திற்கு நன்றி செல்ல வேண்டும்.
தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து போராடியதற்கு முக்கிய காரணமே அரசு பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் பல லட்சம் செலவு செய்து கோச்சிங் சென்று படித்து பாஸ் ஆகி நல்ல மதிப்பெண் பெற முடியாது என்பதற்குத்தான்.
ஆனால் இந்தியாவில் எல்லா மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகம் மட்டும் எதிர்த்த காரணத்தால் மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை. அதேநேரம் நீட் தேர்வுக்கு தயாராகும் விதமாக பாடங்களை மாற்றியமைப்பதற்கு கூட அவகாசம் இல்லாத நிலை இருந்தது.
அரசியலா பண்றீங்க.. எங்க கிட்ட எடுபடாது.. 7.5% இட ஒதுக்கீடு இந்த ஆண்டே அமலாகும்.. முதல்வர் அதிரடி
ஒப்புதல் வழங்கவில்லை
இதன் காரணமாக தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டமசோதாவை மத்தியஅரசு ஏற்கவில்லை. கிடப்பில் கிடந்த மசோதாவிற்கு கடைசியில் குடியரசுத் தலைவர் ஒப்புதலும் வழங்கவில்லை. இதனால் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு அமலில் இருக்கிறது,
அரசு பள்ளி மாணவர்கள்
ஏறக்குறைய இப்போது நீட் தேர்வு வந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் எதிர்ப்பார்த்த சோகம் நடந்தது. அரசு பள்ளி மாணவர்கள் ஒற்றை இலக்கத்திலும், இரட்டை இலக்கத்திலும் ஒவ்வொரு ஆண்டும் எம்பிபிஎஸ் படிக்க சேர்ந்தார்கள். கஷ்டப்பட்டு படித்து பாஸ் ஆக வேண்டும் என்றாலும் அதற்கு உரிய பாடத்திட்டம், பயிற்சி எதுவும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இதுதான் அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பு எட்டாமல் போக காரணமாக இருந்தது.
ஆளுநர் தாமதம்
இந்த சூழலில் தமிழக அரசு இந்த கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நீண்டநாட்களாக தாமதித்தார். அமைச்சர்கள் நேரில் சென்று விரைந்து ஒப்புதல் அளிக்கும்படி அழுத்தம் கொடுத்தனர். அதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலினும் அழுத்தம் கொடுத்து ஆளுநருக்கு கடிதம் எழுதினார்.
அழுத்தம் கொடுத்த எடப்பாடி
இதற்கு பதில் அனுப்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இதில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க வேண்டியுள்ளது என்றும், 3 முதல் 4 வாரங்கள் ஆகும் என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின் ஆளும் தமிழக அரசுக்கு எதிராகவும், ஆளுநருக்கு எதிராகவும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் குறித்து நீண்ட விளக்கம் அளித்தார்.
உயர்நீதிமன்றமும் அழுத்தம்
இதனிடையே இந்த ஆண்டு மருத்துவ படிப்பு கவுன்சில் தொடங்க உள்ள நிலையில் உடனே ஒப்புதல் அளித்து இந்த ஆண்டே அரசு பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர வழிவகை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆளுநர் மனசாட்சி படி முடிவெடுக்க வேண்டும் என்று கூறியது.
பாராட்டிய ஸ்டாலின்
இந்த சூழலில் நேற்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட்டார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலினும் வரவேற்பு தெரிவித்தார். இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு இடஒதுக்கீடு உறுதியாகியது. அத்துடன் ஆளுநருக்கு நெருக்கடி ஏற்பட்டது.
பாராட்டுக்கள்
இதையடுத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கு நீண்ட அழுத்தத்திற்கு பின்னர் ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் இந்த ஆண்டே சுமார் 300 அரசு பள்ளி மாணவர்கள் டாக்டர் படிப்பில் சேரமுடியும், வெறும் 8 பேர் சேர முடியும் என்கிற நிலையை 300 ஆக உயர்த்தியதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு முக்கிய பங்கு உண்டு. இதேபோல் தகுந்த நேரத்தில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும் நன்றி சொல்ல வேண்டும். இதற்கு ஆதரவு தெரிவித்த அத்தனை அரசியல் கட்சிகளும் நன்றிக்கு உரியவர்களே...!