ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் யார்? இன்றும் பரபர ஆலோசனை!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக இன்றும் சென்னையில் காங்கிரஸ் தலைவர் ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸின் திருமகன் ஈவெரா காலமானதால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே தொகுதியை ஒதுக்கிவிட்டது திமுக. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் வேட்பாளராக மகன் சஞ்சய் சம்பத்தை அறிவிக்க வேண்டும் என்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். மறைந்த திருமகன் ஈவெரா, ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் என்பதால் மற்றொரு மகனுக்கு வாய்ப்பு கேட்டிருக்கிறார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நேற்று சென்னை வருகை தந்தார். சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் அறிவுறுத்தலில் சென்னை வருகை தந்தேன். சென்னையில் காங்கிரஸ் தலைவர்களுடன் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினேன். ஞாயிற்றுக்கிழமையும் இந்த ஆலோசனை தொடர்ந்து நடைபெறும் என்றார்.
மேலும் சென்னை ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கும் என்றார்.
இதனிடையே சென்னையில் இன்றும் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தினேஷ்குண்டுராவ் தலைமையிலான இந்த ஆலோசனையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications