பெண் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு மறுப்பு... K.s.அழகிரி மீது புகார் கூறி டெல்லிக்கு பறந்த கடிதங்கள்..!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து முடிவுக்காக காத்திருக்கும் சூழலில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை மீது புகார் வாசித்து டெல்லிக்கு கடிதங்களை பறக்கவிட்டு வருகின்றனர் கதர்சட்டை பிரமுகர்கள்.
அதிலும் குறிப்பாக மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கே.எஸ்.அழகிரி மீதான தங்கள் கோபத்தை கடிதம் வாயிலாக ராகுலிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை ஒதுக்கியது திமுக. அந்த 25 இடங்களில் ஒரே ஒரு பெண் வேட்பாளருக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதுவும் டெல்லியில் தனக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றிருந்தார் விஜயதரணி.
மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் வேறு யாரும் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. 25 சீட்களில் குறைந்தது 6 இடங்களாவது பெண்களுக்கு ஒதுக்கப்படும் என எண்ணியிருந்த மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பிறகு நொந்துபோனார்கள்.
மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளான சுதா, ஸ்ரீவித்யா கணபதி, ஹசீனா சையத், ஜான்சிராணி என பலரும் தங்களுக்கு தலைமை சீட் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவரவர் எதிர்பார்த்த தொகுதிகளில் களப்பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்துவிட்டு திமுகவிடன் தொகுதியை பெற்றதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது புகார் கூறி ராகுலுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் தமிழக மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜான்சிராணி.
நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் இருந்த இவர், கடந்த 5 ஆண்டுகளாக அந்த தொகுதியை குறி வைத்து பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. பெண் நிர்வாகிகள் பஞ்சாயத்து ஒரு பக்கம் என்றால், சிறுபான்மையினருக்கு போதிய எண்ணிக்கையில் சீட் கொடுக்கவில்லை என்பது மற்றொரு பஞ்சாயத்தாக உள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப் சுர்ஜிவாலா, திக்விஜய் சிங்கிற்கு கொரோனா
வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட ஹசன் மவுலானா ஒருவர் மட்டுமே தமிழக காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட முஸ்லீம் வேட்பாளர். 25 இடங்களில் 2 தொகுதிகளிலாவது இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்பது மற்றொரு விவாதமாக உள்ளது.
தமிழகத்தில் இருந்து வரும் கடிதங்கள் மீது டெல்லி தலைமை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு ஒரு வேளை இது பற்றி பரிசீலிக்கலாம் எனத் தெரிகிறது. இதனிடையே புகார்கள் தொடர்பாக கேட்கப்பட்டால், களநிலவரம், அரசியல் யதார்த்தம், உள்ளிட்ட காரணங்களை பக்காவாக பட்டியலிட்டு பதிலளிக்க காத்திருக்கிறது தமிழக காங்கிரஸ் தலைமை.