ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ்! மோடி தடுக்கிறாரா? உதயநிதி பற்றி உலகத்துக்கே தெரியும்! தமிழிசை பதில்
சென்னை: திரைப்படங்களை நேரடியாக தடை செய்த வரலாறு காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு, இது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம், ஜனநாயகன் ரிலீஸுக்கு நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்துள்ளார். மேலும் உதயநிதி திரைத்துறையினருக்கு கொடுக்கும் அழுத்தம் உலகம் அறிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் கூறியிருப்பதாவது: இந்த உலகமே மதிக்கும் மிகப் பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி.. ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்பிற்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர் அவர்கள் தான்.. ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும் பாரத பிரதமரையும் குறை சொல்லி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்...

நேற்றைய தினம் வழக்காடு மன்றத்திலேயே இந்த சென்சார் சர்டிபிகேட்டுக்கும் மத்திய அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது.. அவசர நிலை பிரகடனத்தின் போது கருத்து சுதந்திரத்தில் கழுத்தை நெரித்த காங்கிரஸ் இன்று ஜனநாயகம் திரைப்படத்திற்காக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கலையில் இருந்து அரசியலை விலக்கி வைப்போம் என்று காங்கிரஸ் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை... திரைப்படங்களை நேரடியாக தடை செய்த வரலாறு காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு.. இது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம்...
எல்லாவற்றிற்கும் மேலாக திமுகவின் இளங்கோவன் அவர்கள் திரைத்துறைக்கு அழுத்தம் தருவதால் அரசியலில் வென்று விட முடியாது என்று சொல்கிறார்.. அதுவும் உதயநிதி எவ்வளவு திரைத்துறையினருக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும்.. திரையரங்குகள் கிடைக்க செய்வதில் கூட இவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உலகம் அறிந்த உண்மை... சட்ட ரீதியாக CBFC (சென்சார் போர்டு) செயல்படுகிறது. அதன் நடைமுறையை அரசியலாகி கொண்டு இருக்கிறார்கள்.
விஜய் அரசியலுக்கு வருவது தவறல்ல. ஆனால் அவர் படம் அரசியல் ஆக்கப்படுவது தான் வேடிக்கையான வேடிக்கை... சட்ட ரீதியாக சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் ஒரு வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு அதன் பின்பு அழுத்தம் கொடுப்பது சரியான நடைமுறை அல்ல... சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு பின்பு ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் தினத்தை நாங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இவ்வாறு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாக இருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த நிலையில் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் கிடைக்க விடாமல் பிரதமர் மோடி, விஜய்க்கு அழுத்தம் கொடுக்கிறார் என தமிழக காங்கிரஸ் கட்சி பதிவிட்டுள்ளது. அதற்கு தமிழிசை மேற்கொண்டவாறு பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications