''சாப்பிட்டு சாய்ங்காலமா தேடுவோம்''! மீம்ஸ்களால் காங்கிரஸ் கட்சியினரை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்
சென்னை: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 2 நாட்கள் ஆகியும், அவரது எம்.பி.பதவி பறிக்கப்பட்டு 24 மணி நேரம் ஆகியும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் போராட முன் வராதது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக உள்ளது.
தலைவனுக்கு ஒரு பிரச்சனை என்றால் இந்நேரம் தொண்டர்களும், நிர்வாகிகளும் சாலைக்கு வந்திருக்க வேண்டாமா என வார்த்தைகளால் காங்கிரஸ் கட்சியினர் வறுத்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் இது குறித்தெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் கவலைப்பட்டது போல் தெரியவில்லை என்பது கார்த்தி சிதம்பரம் வெளியிட்ட டிவிட்டர் பதிவிலிருந்தே தெரிகிறது.

ராகுல் காந்தி
பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த அதிர்வலைகள் ஓய்வதற்குள் அவரது எம்.பி.பதவி பறிக்கப்பட்டு மேலும் அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் கண்டித்து போராட்டம் நடத்தாதது தான் குறை, மற்றபடி அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துவிட்டன.

எப்போது போராட்டம்?
விட்டால் ராகுலுக்காக போராட்டம் கூட நடத்திவிடுவார்கள் போல், அந்தளவுக்கு எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் ராகுல் பக்கம் நிற்கின்றன. ஆனால் காங்கிரஸ் முகாமிலோ கூடி கூடி பேசுகிறார்களே தவிர போராட்ட நடத்துவது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. திங்கள்கிழமை முதல் காங்கிரஸ் தரப்பில் அநேகமாக போராட்டங்கள் தொடங்கலாம் எனத் தெரிகிறது. இதனிடையே ''சாப்பிட்டு சாய்ங்காலமா தேடுவோம்'' என நடிகர் சந்தானத்தின் திரைப்பட காட்சியை பதிவிட்டு காங்கிரஸ் கட்சியினரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தெறிக்க விடும் மீம்ஸ்கள்
இன்னொரு பக்கம் கூட்டணிக் கட்சி என்ற முறையில் ''தேர்தல் பணிகளை வேண்டுமானால் பார்க்கலாம், போராட்டமும் நாங்களே செய்தால் அது உங்களுக்கு தான் அசிங்கம்'' என திமுக தரப்பில் மீம்ஸ்கள் தெறிக்கவிடப்படுகின்றன. இது போதாதென்று கார்த்தி சிதம்பரத்தின் டிவிட்டர் பதிவால் கடுப்பான பலரும் ''நீ ரசத்த ஊத்து'' மூவ்மெண்ட் என அவரை கலாய்த்து வருகின்றனர். மொத்தத்தில் மக்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு விவகாரத்தை காங்கிரஸ் கட்சியினர் சரியாக கையாளவில்லை என்பது புரிகிறது.

மாற்றுக்கருத்து
இதே ஒரு மாநிலக் கட்சியாக இருந்திருந்தால் இந்நேரம் நடந்திருக்கும் அரசியலே வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருந்திருக்க முடியாது. 4 பேர் மட்டுமே தன்னுடன் இருப்பினும் கேலி கிண்டல்களை பற்றி கவலைப்படாமல் தாம் செல்லவிருந்த ரயிலையே மறியல் செய்து கே.எஸ்.அழகிரி கவனம் ஈர்த்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications