குதிரையை பின்னாடி கட்டி வண்டியை இழுக்கும் மத்திய பாஜக அரசு- காஷ்மீர் விவகாரத்தில் ப.சிதம்பரம் பொளேர்
சென்னை: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் குதிரையை பின்னாடி கட்டி வண்டியை இழுக்க நினைக்கிறது மத்திய பாஜக அரசு என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் சாடியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலைத் தவிர வேறு எந்த அரசியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 2 ஆண்டுகளாக நிர்வாகத்தை துணை நிலை ஆளுநர்தான் கவனித்து வருகிறார்.

மோடி ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டத்தை பிரதமர் நேற்று தமது இல்லத்தில் நடத்தினார் இதில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் குலாம்நபி ஆசாத், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா (ஒமர் அப்துல்லா), மெகபூபா முப்தி உள்ளிட்ட 14 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

மீண்டும் மாநில அந்தஸ்து
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார். அதேநேரத்தில் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; சிறையில் உள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

தேர்தலுக்கு முன்னுரிமை
மத்திய அரசைப் பொறுத்தவரையில் ஜம்மு காஷ்மீரில் முதலில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. ஆனால் ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் இதனை கடுமையாக எதிர்க்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ப. சிதம்பரம் அட்டாக்
ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் மாநில அந்தஸ்தை முதலில் வழங்குங்கள்; பின்னர் தேர்தலை நடத்டலாம் என்கின்றனர். மத்திய அரசோ முதலில் தேர்தலை நடத்துவோம்; பின்னர் மாநில அந்தஸ்து வழங்குவோம் என்கிறது. அதாவது குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டும்; குதிரையை பின்னாடி கட்டிவிட்டு வண்டியை இழுக்க நினைக்கிறது மத்திய அரசு; இது விசித்திரமானது.. ஒரு மாநிலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்; அந்த தேர்தல் நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications