காங்கிரஸே பாஜக கைப்பாவை “உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா?” சூடான சிபிஎம்- தலைமைக்கு சம்பந்தம் இல்லை!
சென்னை : ராகுல் காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் காங்கிரஸ் கட்சி, கேரளாவில் பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டம் நடத்துவது ஏன் என இடதுசாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பினராயி விஜயன் மீதான குற்றச்சாட்டு பாஜகவின் பழிவாங்கும் திட்டம் என்றும் காங்கிரஸ் கட்சியினர் பா.ஜ.கவின் கைப்பாவையாக செயல்படுகின்றனர் என்றும் சி.பி.ஐ.எம் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இதில் இரட்டை நிலைப்பாடு இல்லை. கேரளாவில் காங்கிரஸார் நடத்தும் போராட்டத்தில் தேசிய தலைமையின் தலையீடு இல்லை எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் போராட்டம்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தியிடம் 13ஆம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகர் டெல்லி தொடங்கி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம்
அதேபோல, கேரளாவில் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். கேரளாவில் நடந்த தங்கம் கடத்தலில் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் தங்க கடத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

கேரளாவில் போராட்டம்
இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், எதிர்கட்சியினர் முதல்வர் பினராயி விஜயன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, பா.ஜ.கவினரும் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடதுசாரிகள் குற்றச்சாட்டு
இந்நிலையில், ராகுல் காந்தியை விசாரணைக்கு அழைத்ததற்கே போராட்டம் நடத்தும் காங்கிரஸார், கேரளாவில் தங்கக் கடத்தல் தொடர்பான விசாரணை முடிவடையும் முன்னரே கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்துவது, காங்கிரஸின் இரட்டை நிலைப்பாட்டைக் இடதுசாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இரட்டை நிலைப்பாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சோனியா, ராகுல் காந்தி மீதான விசாரணை பழிவாங்கும் நடவடிக்கை. குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கும் நேரத்தில், காங்கிரஸ் தலைவர்கள் மீது மத்திய அரசு அபாண்டமான பழி சுமத்தியுள்ளது. அதை காங்கிரஸும், நாங்களும் எதிர்க்கிறோம். ஆனால், அதே காங்கிரஸ், கேரளாவில் பாஜகவுக்கு துணை போகிறது. தங்கக் கடத்தலில் பினராயி விஜயனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி இது என்றார்.

பாஜகவின் கைப்பாவையான காங்கிரஸ்
மேலும், பாஜக அனைத்து மாநிலங்களிலும் இதே போலத்தான் செயல்படுகிறது. அதன் ஒரு பகுதிதான் பினராயி விஜயன் மீதான குற்றச்சாட்டு. ஆனாலும், காங்கிரஸ் கட்சியினர், பா.ஜ.கவின் கைப்பாவையாக செயல்படுகின்றனர் எனக் குற்றம்சாட்டினார். கேரளாவில் விசாரணை நடத்த வேண்டும் என்றால், டெல்லியில் மட்டும் விசாரணை நடத்தக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார் கே.பாலகிருஷ்ணன்.

கே.எஸ்.அழகிரி
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், இதில் இரட்டை நிலைப்பாடு இல்லை. ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இதற்கு பினராயி விஜயனின் பதில் என்ன என்று கேட்டுத்தான், கேரளாவில் காங்கிரஸார் போராட்டம் நடத்துகின்றனர். மேலும், இதில் காங்கிரஸ் தேசிய தலைமையின் தலையீடு இல்லை. மாநிலப் பிரச்சனையாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

மாநில பிரச்சனை
அதேபோல, நேஷனல் ஹெரால்டு வழக்கை விசாரிக்கக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. அமலாக்கத் துறை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் கூறுகிறோம். இந்த வழக்கில் பணப் பரிமாற்றம் இல்லை. எந்த விதிமீறலும் கிடையாது. பணப் பரிமாற்றமே இல்லாத வழக்கை அமலாக்கத் துறை விசாரிப்பது ஏன்? இந்த விவகாரத்தில் பாஜக உள்நோக்கத்துடன் அரசியல் செய்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications