அதிமுக 10 தொகுதிகளில் வெற்றி பெறுவதே கஷ்டம்.. எடப்பாடி பழனிசாமிக்கு செல்வப்பெருந்தகை பதில்
சென்னை: அதிமுக 10 தொகுதிகளில் வெல்வதே கஷ்டம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் 210 தொகுதிகளில் அதிமுக வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் செல்வப்பெருந்தகை.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை பேசுகையில், "இந்தியா கூட்டணிக்கும் மற்றவர்களுக்கும் தான் போட்டி. காங்கிரஸ் கட்சியில் பல கமிட்டிகள் இல்லாமல் இருந்தன. இப்போது பணிகளை வேகப்படுத்தியுள்ளோம். கிராம கமிட்டிகளை உருவாக்கி உள்ளோம். ஒதுங்கி இருந்தவர்கள் எல்லோரும் மீண்டும் வர ஆரம்பித்துள்ளனர். பயிற்சி முகாம்களை மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் நடத்த உள்ளனர். 117 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி இருக்கிறோம்.

பாஜக எங்கெல்லாம் உறவு வைக்கிறார்களோ, அங்கே எல்லாம் கூறு போடுவது தான் வழக்கம். ஏற்கெனவே அதிமுகவை எடப்பாடி அதிமுக, ஓபிஎஸ் அதிமுக, டிடிவி அதிமுக, சசிகலா அதிமுக என நான்காக பிரித்து வைத்து இருக்கிறார்கள். இப்போது ஐந்தாவது அதிமுகவாக செங்கோட்டையன் தலைமையில் உருவாகலாம்.
எடப்பாடி பழனிசாமி எந்த இடத்திற்குச் செல்கிறாரோ அதற்கேற்ப பேசுகிறார். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை வைக்க எடப்பாடி பழனிசாமி கோருவது சந்தர்ப்பவாதம். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இத்தனை ஆண்டுகள் ஏன் இதை செய்யவில்லை? தமிழ்நாட்டுக்கு விரோதமான பாஜக உடன் கூட்டணி வைப்பவர்கள் அனைவரும் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டசபை தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அதில் 2-ஐ எடுத்து விடுங்கள். அதிமுக 10 தொகுதிகளில் வெல்வதே கஷ்டம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், "திமுக 4 ஆண்டுகால ஆட்சியிலே எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பாலியல் வன்கொடுமைகள், பல்வேறு போராட்டங்கள் விவசாயிகள் போராட்டம், அரசு ஊழியர் போராட்டம்... இப்படி பல தரப்பில் இருந்தும் போராட்டத்தை இந்த அரசு சந்தித்துக் கொண்டு இருக்கிறது. மக்கள் செல்வாக்கு இழந்துவிட்டது. ஆகவே நடைபெற இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி, சுமார் 210 இடங்களில் வெற்றி பெறும். பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்." எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications